செங்கல்பட்டு மாவட்டத்தின் புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று மாமல்லபுரம். கரோனா பெருந்தொற்றின் காரணமாக, ஏறத்தாழ 10 மாதங்களுக்கு மேலாக, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது கரோனா தடுப்பு நடைமுறைகள், படிப்படியாக தளர்த்தப்படுவதால், மாமல்லபுரத்திற்கு நிபந்தனைகளுடன், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வழக்கமாக சனி ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில், மாமல்லபுரத்தில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளும், தற்போது மீண்டும் தொடங்கி களைகட்டி வருகின்றன. எனவே, படிப்படியாக மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், ஆர்வத்தின் காரணமாகவோ, அலட்சியத்தின் காரணமாகவோ, முகக்கவசம் அணியாமல், கூட்டம் கூட்டமாக வருவது காண்போரை அச்சுறுத்தி வருகிறது. மாமல்லபுரத்தில் முகக்கவசங்கள் பல்வேறு விதமாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் பெரும்பாலானோர் அவற்றின் மீது அலட்சியம் காட்டி வருகின்றனர். மிகச்சில சுற்றுலா பயணிகளே, முகக்கவசம் அணிந்தவாறு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மக்களின் தயக்கத்தைப் போக்க தற்போது முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்களில், 90க்கும் மேற்பட்ட சதவீதத்தினர், இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில், முகக்கவசம் அணியாமல், ஆயிரக்கணக்கில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது, மிகவும் கவலை தரக்கூடியதாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.