ETV Bharat / state

மருத்துவர்களுக்கு இணையாக இருளர்கள் மதிக்கப்பட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Mar 2, 2023, 10:14 PM IST

மருத்துவர்களுக்குத் இணையாக இருளர்கள் மதிக்கப்பட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
மருத்துவர்களுக்குத் இணையாக இருளர்கள் மதிக்கப்பட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

மருத்துவர்களுக்கு இணையாக இருளர்களும் மதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

மருத்துவர்களுக்குத் இணையாக இருளர்கள் மதிக்கப்பட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

செங்கல்பட்டு: காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வடிவேல் கோபால், மற்றும் மாசி சடையன் ஆகிய இருளர் சமூகத்தை சேர்ந்த இருவருக்கு, மத்திய அரசு பத்ம ஶ்ரீ விருது அறிவித்துள்ளது. பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் இந்த இருவரும், தமிழ்நாட்டிலிருந்து இருந்து அமெரிக்காவிற்கு சென்று‌, அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காகப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்கள்.

இன்று, மார்ச் 2ஆம் தேதி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சார்பாக பத்மஸ்ரீ விருது பெற்றதற்காக, வடிவேல் கோபால், மாசி சடையன் இருவருக்கும் சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், 'உங்களைப் புரிந்து கொள்ளவும், உங்கள் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் நான் இங்கு வந்துள்ளேன். இவர்கள் இருவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரால் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் ஜனாதிபதி அவர்களின் கைகளால் பத்மஸ்ரீ விருதை இவர்கள் பெற உள்ளனர்.

பொதுவாக பாம்பு பிடிப்பவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. இருளர்‌ பழங்குடியின மக்கள் தொன்று தொட்டு பாம்பு பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய இருளர் பழங்குடியின மக்களைப் பற்றி ஒருவரும் பேசவில்லை. இது வருந்தத்தக்க விஷயம்.

இந்தியாவில் பல இடங்களில் பாம்புக் கடி பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால், இருளர் சமூகத்தினரால் தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என பெரும்பாலானோருக்குத் தெரியாது. இதனை ஒரு தொழிலாகப் பாவித்து அதனை அங்கீகரிக்க வேண்டும். நாம் இவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது. அவர்களுக்கான மரியாதையையும் பெற்றுத் தர வேண்டும்.

இருளர்களுக்கு, மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும். மேலும் சில தொழில்நுட்பங்களை பாம்பு பிடித் தொழிலில் கொண்டு வர வேண்டும். இருளர்‌ இன மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் பல திட்டங்களை இருளர் இன மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றன. இவர்களில் ஒரு சிலர் முன்னேறி இருந்தாலும், பலர் வறுமையிலே வாடி வருகின்றனர்.

ஒரு இருளர் காலனி என்பது மற்ற இடங்களைப் போல தார்சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.‌ இது குறித்து நான், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு சில ஆலோசனைகளை வழங்குகிறேன். இங்குள்ள 300 இருளர்களில் ஒருவர் கூட மாநில, மத்திய அரசின் பணியில் இல்லை எனத் தெரிகிறது.

படிப்பில் கவனம் செலுத்துங்கள், இருளர் குடி மக்கள் வளர்ந்தால் இந்த இந்திய தேசியம் வளர்ந்ததாக அர்த்தம். என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன்'' என்று பேசினார். முன்னதாக மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற ஆர்.என்.ரவி, அவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார்.

மேலும், இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் போது எடுத்த புகைப்படங்களைப் பார்வையிட்டார். இவ்விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மனைவி மீது சந்தேகம்.. மாறுவேடத்தில் சென்று கொலை செய்ய திட்டம்.. பேராசிரியர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.