ETV Bharat / state

சென்னையில் பசுமை தமிழ்நாடு இயக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

author img

By

Published : Sep 24, 2022, 6:32 PM IST

Etv Bharatபசுமை  தமிழ்நாடு  இயக்கம் -   முதலமைச்சர்   ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Etv Bharatபசுமை தமிழ்நாடு இயக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் இன்று (24.9.2022) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப் பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தவுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் மக்களின் முழுஅளவிலான பங்களிப்புடனும், பலதரப்பட்ட நம் மண்சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவுத் திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

பசுமை  தமிழ்நாடு  இயக்கம்
பசுமை தமிழ்நாடு இயக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோள்: தமிழ்நாட்டில் வனப் பரப்பை அதிகப்படுத்தி பசுமைப் போர்வையை விரிவுபடுத்தும் வகையில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டுமர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

முதலமைச்சர்   ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்த இயக்கத்தின் கீழ், அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புர பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும்.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

நாற்றுகளின் தேவை மற்றும் நாற்றங்கால்களைக் கண்காணிக்க, பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக www.greentnmission.com என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கன்றுகளின் நடவு, பிழைப்புத்திறன் (Survival Rate) போன்றவற்றை கண்காணிப்பதற்கு அனைத்து நடவு இடங்களின் விவரங்கள் புவிக்குறியீடு தரவுகளுடன் சேகரிக்கப்படுகின்றன.

பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர் (Digital Wall), எண்ம நூல்கள் (Digital Book) போன்றவற்றை முதலமைச்சர் பார்வையிட்டார்.

பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலர்: இந்நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார். பின்னர், பசுமையாக்கல் மற்றும் மரம் வளர்ப்பு பணிகளில் சிறந்த முறையில் பங்காற்றிய விவசாயிகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்களிடம் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு தங்களது பங்களிப்பாக, ஹ&ண்டாய் இந்தியா மோட்டார் நிறுவனத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாயும், மணலி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் 35 லட்சம் ரூபாயும், பசுமை சுற்றுச்சூழல் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் 1 லட்சம் ரூபாயும், மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் 15 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 46 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

முதலமைச்சரால் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்ட நாளான இன்று, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி. செல்வம், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர். ராஜா, எஸ். சுதர்சனம், ஏ.வி.எம். பிரபாகர் ராஜா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:அதிகரித்து வரும் தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.