ETV Bharat / state

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்

author img

By

Published : May 5, 2021, 6:27 AM IST

Updated : May 5, 2021, 8:45 AM IST

chengalpattu GH, CORONA PATIENTS DIED IN CHENGALPATTU GH
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்

06:16 May 05

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதறி அழும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்

செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று (மே 4) மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரவு 10.30 மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டதால், ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வேண்டும் என கோரிக்கை வைத்தும் அங்கும் குறைந்த அளவிலேயே இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக அரசு, தனியார் ஆம்புலன்ஸ்களின் உதவியுடன் ஆபத்தான நிலையில் இருந்த பொதுமக்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இறந்த நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தங்கள் உறவினர்களை இழந்த சொந்தங்களோ எதிர்பாராத இந்த விபத்தால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்தன. இந்த காட்சிகளை பார்க்கும்போது கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக பொதுமக்கள் வீதி வீதியாக அலைந்து தெரிந்த காட்சிகள் தான் நம் கண்முன்னே வந்து சென்றன.

உயிரிழந்த ஒருவரின் மகன்," இது என்னுடைய அப்பா சார்.. எங்களுக்கெல்லாம் அவர் ராஜா மாதிரி. நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க.. டாக்டர்கள் உயிரை காப்பாத்த முடியலனு அழுகுறாங்க" என கண்ணீருடன் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகே பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து காவல் துறையினரின் முழு ஒத்துழைப்புடன் ஆக்ஸிஜன் கொண்டுவந்து நிரப்பப்பட்டு பின் தான் நிலைமை சீரானது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்டபோது தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்ததாகவும், இதை எதிர்பாராத இறப்பாக கருதுகிறேன். இது குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

Last Updated :May 5, 2021, 8:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.