அரியலூரில், ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கியது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் ரத்னா, கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில், வியாபாரிகள் தங்களது பெயர் பலகையை, தமிழில் வைக்க வேண்டும். மேலும், அலுவலகங்களில் அனைத்து பதிவுகளும் தமிழில் பேணப்பட வேண்டும்.
தொடர்ந்து, அலுவலர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, தமிழ் தொண்டை ஊக்குவிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்பேரணி, சத்திரம் கடைவீதி மாதா கோவில் தெரு என நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் அண்ணா சிலையை வந்தடைந்தது. மேலும், பேரணியில் ஏராளமான தொழில் பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்? - முதலமைச்சரிடம் இஸ்லாமியர்கள் மனு