அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பங்கள் அதிகளவில் குவிந்துவருகின்றன. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்பட்டது. அந்நேரம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது கரோனா நிவாரண நிதி முழுமையாக வழங்கப்பட்டதையடுத்து புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி மீண்டும் நடைபெற்றுவருகிறது. புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
குடும்பத் தலைவர்கள் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து குடும்ப அட்டை தொடர்புடைய சேவைகளும் இந்தத் தளத்தில் மேற்கொள்ள முடியும்.
புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணுடன் முகவரி உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை இணையதளம் வாயிலாகவே அலுவலர்கள் சரிபார்த்து, பின்னர் வீடுகளுக்கே கள ஆய்வாளர்களை அனுப்பி அட்டை வழங்க பரிந்துரை செய்வர்.