தமிழ்நாட்டில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தப்படவில்லை. இப்பகுதிகளுக்கு தேர்தலை நடத்த வரைவு வாக்காளர் பட்டியல், வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இறுதி செய்வதற்காக அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர்களும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி ஆணையர்களும் கலந்துகொண்டனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதில், அந்தந்த பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளை வாக்குச்சாவடிகளாக அமைக்கவேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உள்ள மொத்த வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் பெயரை பட்டியலிலிருந்து நீக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களுடைய கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகவும் நாளை மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வழங்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதன் இறுதி பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்திற்கு வருகின்ற 5ஆம் தேதி அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: போராட்டங்கள் மூலம் நீதிமன்றத்தை நிர்பந்திப்பதா? - நீதிபதிகள் எச்சரிக்கை!