ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனி நபர்கள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு - அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : May 16, 2022, 5:42 PM IST

ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனி நபர்கள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள அய்யன் சுத்தமல்லி கிராமத்தைச்சேர்ந்த கே. சஞ்சய் காந்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அய்யன் சுத்தமல்லியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்திற்காக 24 மனைகள் பிரிக்கப்பட்டதாகவும், அவற்றில் 4 மனைகளை பன்னீர்செல்வம் மற்றும் லோகநாதன் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே வீடுகளும், விவசாய நிலங்களும் வைத்திருக்கக்கூடிய இருவரும் ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நான்கு மனைகளையும் மீட்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீது நீதிபதிகள் சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாப்பாரப்பட்டி வரதராஜ சுவாமி கோயில் தேர் திருவிழா: வாட்ஸ் ஆப் மூலம் வழக்கை விசாரித்த நீதிபதி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.