பள்ளி நுழைவு வாயிலில் ஊராட்சி மன்ற அலுவலகம்: பள்ளிக்கே ஒப்படைக்க கோரி போராட்டம்

author img

By

Published : Feb 10, 2022, 9:30 AM IST

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை அறப் போராட்டம்

அரியலூர் அருகே வரம்பு மீறி பள்ளி நுழைவு வாயில் அருகே கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பள்ளிக்கு ஒப்படைக்கக் கோரி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்: தாமரைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில் பள்ளிக் கட்டடம் இருந்த இடம் போதுமானதாக இல்லாததால் கிராம பொதுமக்கள் சார்பில் பள்ளிக்குப் பின்னால் இருந்த சுமார் ஒரு ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கி அரசிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பள்ளி கட்டடம் கட்டப்பட்டு ஏற்கனவே பள்ளிக் கட்டடம் இருந்த இடம் மாணவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டு மாணவர்கள் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில் தாமரைக்குளம் ஊராட்சி கட்டடத்தில் போதுமான இடவசதி இல்லை எனக் கூறி மாணவி, மாணவிகள் பயன்படுத்திவந்த விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து பள்ளி நுழைவாயில் அருகே பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை அறப் போராட்டம்

பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை மீண்டும் பள்ளிக்கு வழங்க வலியுறுத்தியும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முன்பு கையில் தேசியக் கொடியை ஏந்தி உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி உயிரிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் உற்பத்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.