‘சேலத்தில் விளையாட்டு அகாடமி தொடங்குவேன்’ - ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன்

author img

By

Published : Sep 13, 2021, 8:04 AM IST

மாரியப்பன், மாரியப்பன் தங்கவேலு, சொந்த ஊரில் மாரியப்பன், மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு, mariyappan thangavelu, mariyappan in hometown, paralympian mariyappan

சேலத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் விரைவில் விளையாட்டு பயிற்சி மையம் தொடங்குவேன் என ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சேலம்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை குவித்து, பதக்கப்பட்டியலில் 24ஆவது இடத்தை பிடித்தது.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்ற அவர், டோக்கியோவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் வந்த மாரியப்பன்

இதையடுத்து, டோக்கியோவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாரியப்பன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், நேற்று (செப். 12) மாலை சொந்த ஊரான பெரியவடகம்பட்டிக்கு வந்தார்.

மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

அப்போது அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் காடையாம்பட்டி அருகேவுள்ள தீவட்டிப்பட்டி எல்லையில் இருந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தீவட்டிப்பட்டியிலிருந்து மேளதாளம் முழங்க, அலங்கரிக்கப்பட்ட வேனில் மாரியப்பனை ஏற்றி சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

பிரார்தனைக்கு நன்றி

தீவட்டிப்பட்டி எல்லையில் சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம், மாரியப்பனுக்கு கிரீடம் சூட்டி, சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

மேலும், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் 'மாபெரும் தமிழ் கனவு' எனும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரை குறித்த புத்தகத்தை மாரியப்பனுக்கு பரிசளித்து பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பன், “இந்தியாவுக்காக பதக்கம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தது உற்சாகமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் வகையில் சேலத்தில் விரைவில் விளையாட்டு பயிற்சி மையம் தொடங்குவேன்" என்றார்.

இதையும் படிங்க: ’பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்றும் அரசு வேலை வழங்கப்படவில்லை’ - மாரியப்பன் தங்கவேலு வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.