ETV Bharat / sports

தயான் சந்த் விருது பெறவுள்ள ரஞ்சித் குமாரின் பிரத்யேக பேட்டி...!

author img

By

Published : Aug 21, 2020, 11:26 PM IST

Dayan Chand Award winning Ranjith Kumar exclusive interview!
Dayan Chand Award winning Ranjith Kumar exclusive interview!

மத்திய அரசு வழங்கவிருக்கும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது மிகவும் பெருமை அளிக்கிறது என்று மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியாளர் ரஞ்சித் குமார், ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதனைப் படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு விருதுகளை மத்திய அரசு இன்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்து, பல்வேறு பதக்கங்களை தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்றதுடன், பயிற்சியாளராகவும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி வீரர்களையும் உருவாக்கிய பயிற்சியாளர் மதுரை ரஞ்சித்குமாருக்கு, மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு ரஞ்சித் குமார் வழங்கிய பிரத்யேக நேர்காணலில், “மிகக் கடுமையான பாதைகளை கடந்து வந்து இந்த சாதனையை படைத்திருக்கிறேன் எனும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த விருதுக்கு என்னை தேர்வு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய தேசத்திற்காக 26 முறை உலக அளவில் பங்கேற்று, குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றுள்ளேன். இதுவரை சர்வதேச அளவில் 22 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளேன்.

அதேபோன்று தேசிய அளவில் 48 தங்கப்பதக்கங்களை வென்று இருக்கிறேன். கடந்த 2014ஆம் ஆண்டு தடகள போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், நான் இதுவரை புரியாத சாதனைகளை என்னுடைய மாணவர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று எண்ணற்ற வீரர், வீராங்கனைகளை தேசிய அளவில் உருவாக்கியுள்ளேன்.

தயான்சந்த் விருது பெற்ற ரஞ்சித் குமாரின் பிரத்யேக பேட்டி

என்னுடைய மாணவர்கள், குடும்பத்தார்கள், நண்பர்கள் என அனைவருக்கும் இந்த விருது மிகப் பெருமை அளித்துள்ளது. என்னுடைய பயிற்சியாளர் பரசுராம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றேன். ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வில் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், தயான் சந்த் விருது பெறயிருக்கும் தருணம் என் வாழ்வில் முக்கிய தருணம் ஆகும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற மாரியப்பன் பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.