ETV Bharat / sports

MS Dhoni retirement: ஐபிஎல் ஓய்வு குறித்து பேசிய தோனி.. அதிலும் ஒரு ட்விஸ்ட்!

author img

By

Published : May 30, 2023, 9:52 AM IST

MS Dhoni retirement: இதுதான் அதற்கான சிறந்த நேரம் - தோனி வைத்த ட்விஸ்ட்
MS Dhoni retirement: இதுதான் அதற்கான சிறந்த நேரம் - தோனி வைத்த ட்விஸ்ட்

ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை கூறியுள்ளார்.

அகமதாபாத்: ஐபிஎல் 2023 போட்டியின் இறுதிப்போட்டி, நேற்று (மே 29) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங்கில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. இந்த இன்னிங்ஸில் அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து 215 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கியது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மழை நின்றதும் தொடங்கிய ஆட்டத்தில் 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், மீண்டும் மழை பெய்தது. இதனால் 15 ஓவர்கள், 171 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

இதனால், 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை படைத்தது. இதனை அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக, இந்த ஐபிஎல் 16வது சீசன் தொடங்கியதில் இருந்தே மகேந்திர சிங் தோனி இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன.

இருப்பினும், இதற்கு அவ்வப்போது ட்விஸ்ட் வைத்த பதில்களை தோனி கொடுத்து வந்தார். இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் தோனியிடம் அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்துப் பேசிய எம்எஸ் தோனி, “என்னுடைய பதிலைத் தேடுகிறீர்களா? எனது ஓய்வை அறிவிக்க இது சிறந்த நேரம் என நினைக்கிறேன். ஆனால், நான் பல்வேறு இடங்களில் இருந்து அன்பைப் பெற்றுள்ளேன்.

இந்த இடத்தில் இருந்து தற்போது சென்று விடுவது என்பது எளிதான ஒன்று. ஆனால், அடுத்த 9 மாதங்கள் கடுமையாக உழைத்து, அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது என்பதுதான் கடினமான ஒன்றாக இருக்கிறது. இது எனக்கு பரிசாக இருக்கும். ஆனால், உடலுக்கு எளிதாக இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் ஆட்டத்தில் ஒவ்வொருவரும் எனது பெயரை உச்சரித்தனர்.

அப்போது எனது கண்கள் முழுவதும் கண்ணீராக இருந்தது. எனவே, எனக்கு சிறிது நேரம் ஓய்வு தேவைப்பட்டது. அதேநேரம், அதனை நான் அனுபவிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். நான் எப்படி இருக்கிறேன் என்பதை அவர்கள் (ரசிகர்கள்) நேசிக்கிறார்கள். நான் மிகவும் அடித்தளமாக இருப்பதையும் அவர்கள் விரும்புகிறார்கள். நான் இல்லாத ஒன்றை வெளிக்காட்ட விரும்பவில்லை. அது எளிமையான ஒன்று.

களத்தில் இருக்கும்போது, அம்பத்தி ராயுடு அவரது 100 சதவீத விளையாட்டைக் கொடுப்பார். ஆனால், அவர் அணியில் இருப்பதால், நான் ஒருபோதும் ஃபேர் பிளே விருதை வெல்லை முடியாது. இந்தியா ஏ சுற்றுப் பயணத்தில் இருந்து நான் ராயுடு உடன் விளையாடி வருகிறேன். அவர், சுழற்பந்து மற்றும் வேகப்பந்தை சமமாக விளையாடக் கூடிய நபர். இது உண்மையிலேயே சிறந்த ஒன்றாக இருக்கிறது.

உண்மையிலேயே ராயடு ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைத்தேன். அவரும் என்னைப் போன்றவர். ஏனென்றால், அடிக்கடி மொபைல் போனைப் பயன்படுத்துபவர் அல்ல. அவர், வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அனுபவிப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: IPL 2023 Season Awards: 5வது முறை கர்ஜித்த சிஎஸ்கே.. விருதுகளின் முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.