ETV Bharat / sports

CSK Vs KKR: ரிங்கு சிங், நிதிஷ் ராணா அபார ஆட்டத்தால் சிஎஸ்கேவை வீழ்த்திய கொல்கத்தா!

author img

By

Published : May 15, 2023, 7:27 AM IST

ipl
ipl

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை: ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், டேவான் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 13 பந்துகளில் 17 ரன்னில் வருண் சக்ரவர்த்தியிடம் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் இறங்கிய ரஹானே 11 பந்துகளில் 16 ரன் சேர்த்த நிலையில் வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தில் ஜேசன் ராயிடம் கேட் ஆகி ஆட்டம் இழந்தார்.

சரியான பார்ட்னர்ஷிப் அமையாத காரணத்தால் துவக்க ஆட்டக்காரர் டேவான் கான்வேயும் ஜொலிக்க முடியாமல் 28 பந்துகளில் 30 ரன் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ராயுடு வந்த வேகத்தில் 7 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்த நிலையில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் சென்னை அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. ஷிவம் டூபே ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க மொயின் அலி 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களம் இறங்கிய ரவீந்திர ஜடேஜா, ஷிவம் டூபே உடன் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவீந்திர ஜடேஜா 24 பந்தில் 20 ரன் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் களம் இறங்கிய கேப்டன் தோனி 3 பந்தில் 2 ரன் சேர்த்து களத்தில் இருந்தார். நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடிய ஷிவம் டூபே 34 பந்தில் 48 ரன் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்தார். ஷிவம் டூபே, டேவான் கான்வே தவிர்த்து வேறு எவரும் அணிக்கு பெரிதான பங்களிப்பை தராததால் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 144 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது.

145 ரன் என்ற இலகுவான இலக்குடன் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய் கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். குர்பாஸ் 4 பந்துகளை எதிர் கொண்டு 1 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்து வெங்கடேஷ் ஐயர் 9 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 15 பந்துகளில் 12 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தா அணிக்கு சிக்கல் அதிகரித்தது. அடுத்து களம் இறங்கிய கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் இருவரும் கை கோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் காட்டிய அதிரடியில் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ரிங்கு சிங் 43 பந்துகளில் 54 ரன் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து கள இறங்கிய ரஸல் 2 பந்தில் 2 ரன் எடுத்து களத்தில் இருந்தார். பொறுப்பான ஆட்டத்தை ஆடிய அணியின் கேப்டன் நிதிஷ் ராணா 44 பந்தில் 57 ரன் சேர்த்து கடைசி வரையில் களத்தில் இருந்தார். இதனால் கொல்கத்தா அணி 18.3 ஓவரிலேயே 147 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானை பந்தாடிய பெங்களூரு: 112 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி! சொந்த ஊரில் மண்ணை கவ்விய ராயல்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.