ETV Bharat / sports

சூர்யகுமார் சதம்.. விக்கெட் வேட்டையில் குல்தீப் யாதவ் - அபார வெற்றி பெற்று டி20 தொடரை டிராவில் முடித்த இந்தியா!

author img

By ANI

Published : Dec 15, 2023, 7:25 AM IST

Updated : Dec 15, 2023, 11:17 AM IST

IND vs SA T20I: மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதன் மூலம், தொடரானது 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.

ஆனால், அப்போது பெய்த தொடர் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி, கடந்த டிசம்பர் 12 அன்று கெபெர்ஹாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் மழை குறுக்கிட்டது.

இதனால், 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 180 ரன்களை குவித்திருந்த நிலையில், ஆட்டம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 13.5 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (டிச.14) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதில் 8 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை அவர் விளாசினார். அதேபோல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் உடன் அரைசதம் கடந்து 60 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தின்போது, தென் ஆப்பிரிக்க அணியின் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, குல்தீப் யாதவ்-இன் அசத்தலான பந்து வீச்சில் 13.5வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தார். இதில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் 35 ரன்கள் எடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல், 95 ரன்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

மேலும், சூர்யகுமார் யாதவ் தனது சதத்தை 55 பந்துகளிலே அடித்தார். இதன் மூலம், 1-1 என்ற புள்ளிக்கணக்கில் டி20 தொடர் சமன் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை: அரையிறுதியில் 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது ஜெர்மனி அணி..!

Last Updated :Dec 15, 2023, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.