ETV Bharat / sports

அண்டர் 19 உலகக்கோப்பை முதல் ஆஸி.,தொடர் வரை: 2020 கிரிக்கெட் ஓர் அலசல்!

author img

By

Published : Dec 27, 2020, 2:00 PM IST

YEAR ENDER 2020: CRICKET
YEAR ENDER 2020: CRICKET

2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக குறைந்த அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றாலும்கூட வரலாற்றில் இடம்பெறும் அளவிற்குப் பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதிலும் குறிப்பாக தோனியின் ஓய்வு, ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனை என பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். அதுகுறித்துப் பார்ப்போம்.

2020 கிரிக்கெட் ஓர் அலசல்

இந்தியா - நியூசிலாந்து:- ஜனவரி மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று ஒருநாள், ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது.

இந்தியா - நியூசிலாந்து
இந்தியா - நியூசிலாந்து

ஆறுதல் வெற்றியாக இருந்தாலும் டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.

யு-19 உலகக்கோப்பை :-

பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த அண்டர்-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா - வங்கதேசம் அணிகள் தேர்வாகின.

யு-19 உலகக்கோப்பையை வென்ற வங்கதேச அணி
யு-19 உலகக்கோப்பையை வென்ற வங்கதேச அணி

இத்தொடரின் இறுதிப்போட்டியில் வங்கதேசம் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து:-

மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி பார்வையாளர்களின்றி நடைபெற்றது.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. அதன்பின் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, மீதமிருந்த இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.

ஐபிஎல் ஒத்திவைப்பு:-

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 15ஆம் தேதி இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை பிசிசிஐ காலவரையின்றி ஒத்திவைத்தது.

உமிழ்நீர் தடை:-

உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு ஐசிசி தடை
உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு ஐசிசி தடை

கிரிக்கெட்டில் பந்துகளை பளபளக்கச் செய்வதற்காக பந்துகளில் கிரிக்கெட் வீரர்கள் உமிழ்நீர் தடவுவது வழக்கம். அவ்வாறு தடவுவதால் பந்துகளை ஸ்விங் செய்வதற்கு உதவி செய்யும். இதனால் பந்துகளை வைத்து இன்னும் சிறிது நேரம் ஸ்விங் செய்யலாம். ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பந்துகளில் உமிழ் நீரைப் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்தது.

டி20 உலகக்கோப்பை ஒத்திவைப்பு:-

கரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த ஆடவர் டி20 உலகக்கோப்பைத் தொடர் தள்ளி வைக்கப்பட்டதாக ஐசிசி அறிவித்தது.

டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பு
டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பு

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான தேதியையும் வெளியிட்டது.

அதன்படி, 2021இல் டி20 உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் என்றும்,இதன் இறுதிப்போட்டி 2021ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் ஐசிசி அறிவித்தது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ்:-

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பார்வையாளர்களின்றி நடைபெற்றது. இத்தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியது. இத்தொடரின் கடைசி போட்டியில் பேட்டிங்கில் 62 ரன்களும் பவுலிங்கில் 10 விக்கெட்டுகளும் (முதல் இன்னிங்ஸில் ஆறு+ இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு) கைப்பற்றிய ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதையும் தொடர்நாயகன் விருதையும் பெற்றார்.

தோனி - ரெய்னா ஓய்வு:-

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திடீரென ஓய்வை அறிவித்து, கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருக்கிறார். அவரின் தலைமையில்தான் இந்திய அணி ஐசிசியின் அனைத்து வகையான கோப்பைகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி - சுரேஷ் ரெய்னா
மகேந்திர சிங் தோனி - சுரேஷ் ரெய்னா

மகேந்திரசிங் தோனி ஓய்வை அறிவித்த சில மணித்துளி நேரத்திலேயே இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு அறிவித்து ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினார். தோனியும், ரெய்னாவும் கிரிக்கெட் உலகில் இணை பிரியா தோழர்களாக வலம் வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் ஒன்றாக விளையாடியபோது, தோனியை ’தல’ என்றும், ரெய்னாவை ‘சின்ன தல’ எனவும் ரசிகர்கள் அன்போடு அழைத்தனர். தோனி ஓய்வுபெற்றவுடன், ரெய்னாவும் ஓய்வுபெற்ற நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆண்டர்சன் சாதனை:-

600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்டர்சன்
600 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த ஆண்டர்சன்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 600ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப் படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

மும்பை சாம்பியன்:-

ஐந்தாவது முறையாக சம்பியனான மும்பை இந்தியனஸ்
ஐந்தாவது முறையாக சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐந்தாவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இந்தியா - ஆஸ்திரேலியா:-

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடியது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இருப்பினும் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12ஆயிரம் ரன்களைக் கடந்து அசத்தினார்.

டி20 தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணி
டி20 தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய அணி

மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக 12 ஆயிரம் ரன்களைக் கடந்த விராட் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலகச் சாதனையையும் முறியடித்தார்.

இந்தியா படுதோல்வி:-

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த இன்னிங்ஸ் ஸ்கோரைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்தது. அதேசமயம் அப்போட்டியில் இந்திய அணியில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட் : ரஹானே, ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா முன்னிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.