இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பந்த் இறுதிவரை போராடி 125 பந்துகளில் 89 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இதனால் இப்போட்டியில் ஆட்டநாயகநாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இப்போட்டியின் முடிவுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரெலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பந்த் தனித்திறன் படைத்தவர், எங்களது வெற்றியை அவர்தான் தட்டிப்பறித்தார் என்றும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்மித், “ரிஷப் பந்த் உண்மையிலும் தனித்திறன் படைத்தவர்தான். இப்போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தை அவர் அற்புதமாக விளையாடினார். இதனால் எங்கள் வசமிருந்த வெற்றியையும் அவர் பறித்துவிட்டார்.
அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் எவ்வளவு சிறப்பானவர் என்பதும், அவர் எங்கு பந்துகளை அடிப்பார் என்பதும் தெரியும். ஆனால் இப்போட்டியில் அவர் அற்புதமான ஒரு இன்னிங்ஸை விளையாடியுள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: ‘தந்தையின் கனவை சிராஜ் நிறைவேற்றிவிட்டார்’ - சகோதரர் பெருமிதம்