ETV Bharat / sitara

2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவெடுத்த சூர்யா

author img

By

Published : Aug 31, 2020, 11:03 PM IST

 Actor Surya Suriya agaram foundation
Actor Surya Suriya agaram foundation

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 1.5 கோடி ரூபாயை திரைப்படத் துறை சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கிய நடிகர் சூர்யா, தற்போது 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவுசெய்துள்ளார்.

'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு முதற்கட்டமாக 1.5 கோடி ரூபாய் திரைப்படத் துறை சார்ந்த அமைப்புகளுக்கு சூர்யா வழங்கினார்.

இந்தத் தொகை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அனைத்திற்கும் இயக்குநர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை வழங்குவது குறித்து இதில் அறிவிப்போம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க உள்ளதாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது:

’ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ’கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம்.

கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.

பொதுமக்கள், திரைத் துறையினர், கரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.\

அதில், பொதுமக்கள், தன்னலமின்றி ’கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு’ பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர், மற்ற மருத்துவத் துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல் துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயிலுபவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவுசெய்திருக்கிறோம்.

ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள், எனது நற்பணி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயிலுகிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

’கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படைக் கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்விக் கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பிவைக்கப்படும்.

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள், விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்தப் பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது.

இந்தத் தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.