அண்ணாத்த 50ஆவது நாள்: 'பாட்ஷா' டயலாக் பேசிய ரஜினிகாந்த்

author img

By

Published : Dec 23, 2021, 4:18 PM IST

ரஜினிகாந்த்

அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 50 நாள்களானதை அடுத்து, 'ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான், கைவிட மாட்டான்... ஆனால் கெட்டவங்களை?' என்னும் புகழ்பெற்ற பாட்ஷா படம் வசனத்தைப் பேசி அதனை ஹூட் செயலியில் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைத்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி வெளியான அண்ணாத்த திரைப்படம் இன்றுடன் 50 நாள்களைக் கடந்துள்ளது. இதனையடுத்து அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஹூட் தளத்தில் குரல் பதிவை வெளியிட்டுள்ளார் ரஜினி.

கீர்த்தி சுரேஷ் உதவியாளருக்கு கரோனா

அதில், “பழம்பெரும் இயக்குநர்கள் டி.ஆர். ராமன்னா (குப்பத்து ராஜா), லோக்சந்தர் (வணக்கத்திற்குரிய காதலியே) போல படப்பிடிப்புத் தளத்தை அமைதியாக வைத்துக்கொண்டார் இயக்குநர் சிவா. சிவா எனக்கு நீண்டகால நண்பர்போல மாறிவிட்டார்.

கரோனாவால் அண்ணாத்த படப்பிடிப்பு சில நாள்கள் நிறுத்தப்பட்டருந்த நிலையில், கரோனா விதிகளைத் தீவிரமாகப் பின்பற்றி பின்னர் படப்பிடிப்பினைத் தொடங்கினோம். படப்பிடிப்பின்போது கீர்த்தி சுரேஷ் உதவியாளருக்கு கரோனா ஏற்பட்டது. அதனை அவர் மறைத்துவிட்டார். ஐந்து நாள்கள் கடந்துதான் அவருக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கீர்த்தி சுரேஷுடன் நான் நெருங்கி நடித்ததாலும், பலமுறை அருகில் நின்று பேசியதாலும் எனக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ எனப் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். கலாநிதி மாறனுக்கு இந்தத் தகவல் தெரிந்தவுடன் அவர் கூறியபடி படப்பிடிப்பை நிறுத்திவிட்டோம்.

சாதகமில்லாத விமர்சனம்

பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு இல்லை என்றாலும், நுரையீரல் பரிசோதனை மேற்கோள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் அப்போலோவில் இரண்டு நாள்கள் தங்கி சிகிச்சைப் பெற்றேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கியது. கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது 800 பேர் வரை பங்கேற்றனர்.

18 நாள் இரவு கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடந்த நிலையில், அதில் எட்டு நாள்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டோம். நான் கூட்டத்தில் நிற்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்திருந்ததால், மொட்டை மாடியில் நின்றவாறு நயன்தாரா, கீர்த்தி சுரேஷை நான் பார்வையிடும் காட்சி படமாக்கப்பட்டது.

எனது உடல்நிலைக்கு ஏற்ப இப்படியான காட்சி அமைந்ததை இறைவன் செயல் என நினைக்கிறேன். தெலங்கானாவில் ஊரடங்குப் பிறப்பிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாள் இரவு சரியாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது, இதுவும் இறைவன் செயல். படம் வெளிவந்த பிறகு விமர்சனங்கள் சாதகமாக இல்லை.

பாட்ஷா வசனம்

வெளிவந்து மூன்று நாள்களானவுடன் கடும் மழை பெய்து, மக்கள் நடமாடவே முடியவில்லை. படம் வெளி வந்தபோதே மழை பெய்திருந்தால் கண்டிப்பாகத் தோல்வி அடைந்திருக்கும். சிவா, கலாநிதி மாறனின் நல்ல மனத்தால் படம் வெளிவந்தபோது மழை இல்லை.

மழை இல்லை என்றால் படம் இன்னும் நன்றாக ஓடி இருக்கும். இதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு 'பாட்ஷா' பட வசனம் நினைவுக்கு வருகிறது. 'ஆண்டவன் நல்லவங்களைச் சோதிப்பான், கைவிட மாட்டான்... ஆனால் கெட்டவங்களை?'” எனப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்குத் தந்தையாக நடிக்கும் சத்யராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.