ETV Bharat / sitara

வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' தனியிசைப் பாடல் தொடர்!

author img

By

Published : Mar 21, 2022, 9:06 PM IST

வைரமுத்துவின் ’நாட்பது தேறல்’ தனியிசைப் பாடல் தொடர்
வைரமுத்துவின் ’நாட்பது தேறல்’ தனியிசைப் பாடல் தொடர்

கவிஞர் வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' தனியிசைப் பாடல் தொகுப்பின் இரண்டாம் பருவம் அவரது யூ-ட்யூப் சேனலில் வெளிவரவிருக்கிறது.

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' என்ற தனிப்பாட்டு தொடர் கவித்துவமாகத் தயாரித்து வழங்கி வருகிறார்.
மேலும், 'நாட்படு தேறல்' முதல் பருவம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, உலகத் தமிழர்களின் பெரும் கவனத்திற்கு உள்ளாகியது. அதனைத் தொடர்ந்து இப்போது 'நாட்படு தேறல் இரண்டாம் பருவம்' தயாராகியிருக்கிறது.

மாபெரும் தயாரிப்பு

இதில், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குநர்கள் என்ற பெரும் திட்டத்தோடு 13 பாடல்களோடு 13 வாரங்கள் வரவிருக்கிறது. வருகிற, ஏப்ரல் 17 ஞாயிறு முதல், கலைஞர் தொலைக்காட்சி, இசையருவி மற்றும் வைரமுத்துவின் யூ-ட்யூப் தளத்திலும் தொடர்ந்து 13 ஞாயிற்றுக்கிழமைகள் ஒளிபரப்பாகவிருக்கிறது.

மேல்நாடுகளில் திரைப்படங்களைவிட்டுப் பாடல்கள் பெரும்பாலும் வெளியேறிவிட்டன. தனிப்பாட்டு ஆல்பங்களே மேல்நாடுகளில் உலகப்புகழ்பெற்று விளங்குகின்றன. இந்தியாவில் அந்த முயற்சி மெல்ல மெல்ல மலரத் தொடங்கியிருக்கின்றது. தமிழில் கவிஞர் வைரமுத்து அந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

பாடல்கள் எழுதி ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு இசையமைப்பாளர், ஒரு பாடகர், ஒரு இயக்குநர் என்று தேர்ந்தெடுத்துப் பாடல் படமாக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது. 'நாட்படு தேறலை' கவிஞர் வைரமுத்தே தயாரித்து வழங்குகிறார்.

பல்வேறு இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள்

'நாட்படு தேறல்' இரண்டாம் பருவத்தில், வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், ரமேஷ் விநாயகம், அனில் சீனிவாசன், ஜெரார்ட் பெலிக்ஸ், நெளபல் ராஜா, அவ்கத், வாகு மசான், இனியவன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களும், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, விஜய் யேசுதாஸ், ஹரிணி, கல்பனா ராகவேந்தர், பென்னி தயாள், ஹரிசரண், அந்தோணி தாசன், வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பாடகர்களும்,

காந்தி கிருஷ்ணா, சரண், பரதன், சிம்புதேவன், சரவண சுப்பையா, ’காக்கா முட்டை’ மணிகண்டன், விருமாண்டி, கணேஷ் விநாயகம், விக்ரம் சுகுமாரன், தளபதி பிரபு, ரமேஷ் தமிழ்மணி, ராதிகா உள்ளிட்ட இயக்குநர்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

ஒரு தலைமுறைக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் கடமை இருக்கிறது

இது குறித்து கவிஞர் வைரமுத்து, “எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்ததில் திரைப்பாட்டுக்குப் பெரும்பங்கிருக்கிறது. இன்று உலகமெங்கும் திரைப்படத்தில் தாய்மொழி குறைந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ் கற்றுக்கொடுக்கும் பாடல்களாக ஆல்பங்கள் தயாரிக்கப்படவேண்டியிருக்கின்றன.

ஒரு தலைமுறைக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் கடமையை 'நாட்படு தேறல்' ஆற்றும்;ஆற்றவேண்டும் என்று விரும்புகிறேன். என்னோடு ஒத்துழைக்கும் அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. தகுதிமிக்க ஆதரவாளர்களால்தான் இது சாத்தியமாகிறது; அவர்களை நான் மறக்க மாட்டேன். 'நாட்படு தேறல்’ என் சமகாலத்தில் வாழும் உலகத் தமிழர்களுக்குக் காணிக்கை ” என்றார்.

இதையும் படிங்க:தி காஷ்மீர் ஃபைல்ஸ் ₹.150 கோடி வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.