‘மது’வுக்கு ஒரு சியர்ஸ்

author img

By

Published : Apr 13, 2020, 12:42 PM IST

Updated : Apr 13, 2020, 12:48 PM IST

ygee-mahendran-daughter-madhuvanthi

உலகம் ஸ்தம்பித்து நிற்கும் சூழலிலும் வான்டடாக வந்து கன்டென்ட் கொடுக்கும் ‘மது’வுக்கு ஒரு சியர்ஸ் சொல்லி குவாரண்டைனைக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்ஸ். மீம் க்ரியேட்டர்ஸின் காட் மதராக அவதரித்த ஒய்.ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி குறித்து நெட்டிசன்ஸ் பார்வையில்....

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், வைரஸ் பரவலின் தீவிரம் இன்னும் குறையாததால், ஊரடங்கை குறைந்தது 15 நாள்களாவது நீடிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடங்கிபோனதில் கன்டென்ட் கிடைக்காமல் மீம் க்ரியேட்டர்ஸ் சோர்ந்திருந்தனர். இந்தச் சூழலில் சமுத்திரக்கனியைச் சம்பந்தமே இல்லாமல் அட்மிட் செய்தார்கள் மீம் க்ரியேட்டர்ஸ். ஆனால், மனசாட்சி உறுத்தியதால் என்னவோ அவரை சிறிது நாள்களிலேயே டிசார்ஜ் செய்தார்கள்.

இந்த நேரத்தில் மீம் க்ரியேட்டர்ஸின் காட் மதராக அவதரித்தார் மதுவந்தி. இவர் யாரென்று எளிதில் சொல்ல வேண்டுமென்றால் நீ.....ண்ட நாள்களாக தமிழ் சினிமாவில் நடித்துவரும் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள். மேலும், சென்னையிலுள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இவர் இருக்கிறார்.உலகத்தை மாதக் கணக்கில் சிறைப்பிடித்து வைத்திருக்கும் கரோனாவை, ஒன்பது நிமிடங்களில் டார்ச் லைட் அடிச்சு வதம் செய்வது எப்படி என்று அட்டகாசமான வீடியோவை வெளியிட மதுவந்தி மீம் சொத்தானார்.

அப்படி என்னதான் பேசினார்?

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் சுகாதாரப் பணியாளர்கள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போராடிவரும் துய்மைப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்களின் தியாகத்தைப் பாராட்டும்வகையில், ஏப்ரல் 5ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடங்கள் வீட்டிலுள்ள விளக்குகளை அணைத்து, அகல் விளக்குகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. விளக்கு ஏற்றுவதற்கும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று மோடி எந்த இடத்திலும் கூறவில்லை. ஆனால் பிரதமர் ஒன்று சொன்னால் உடனே அதற்கு ஏகப்பட்ட விளக்கங்களை உருவாக்கும் "வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி பட்டதாரிகள்" வழக்கம்போல் இந்த விவகாரத்திலும் செயல்பட்டார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக மதுவும் சேர்ந்து மூன்று விளக்கங்களை முன்வைத்தார்., அதாவது, ஏப்ரல் 9ஆம் தேதி ஒன்பது கிரகங்களும் ஒரே நேர்கோட்டுக்கு வருகிறது. அதற்காகவே பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார் (இது பிரதமருக்குத் தெரியுமா?). 150 கோடி மக்கள் விளக்கு ஏற்றுவதால் உருவாகும் ஒளி கரோனாவையும் நாசம் செய்துவிடும். (இதனை அந்த ஒளி நம்புமா) சும்மா ஒரு ஜாலிக்கு லைட் ஆஃப் செஞ்சு, டார்ச் அடிங்க ( ஓ இது ஜாலி விளையாட்டா).

சுகாதாரத் துறை பணியாளர்களைப் பாராட்டுவதற்கு பிரதமர் ஒன்றை செய்ய சொன்னால், அதை அப்படியே மடைமாற்றி கிருமியை வதம் செய்யவும், கிரகங்கள் நேராக நிற்கும் என்றும் கூறி கண்டெண்ட் கொடுத்தார்.

இப்போ ஒரு குட்டி பிளாஷ்பேக் ஸ்டோரி:

கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனியார் சேனல் ஒன்றுக்கு மதுவந்தி பேட்டியளித்தார். அதில் நெறியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘பிராமணர்களுக்கு மூளை அதிகம்’ என்று பேசினார்.

இப்போது பேக் டூ நிகழ்காலம்:

ஜன் தன் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய ரூ. 30 ஆயிரம் கோடியில் 40 விழுக்காடு அதாவது ரூ. 20 ஆயிரம் கோடி பெண்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கு என்றுக் கூறினார். அடுத்ததாக, இந்தியாவில் இருக்கும் 8 ஆயிரம் கோடி மக்களுக்கு (ஆமாப்பு, 8000 கோடி) ரூ. 5,000 கோடி ரூபாயை மக்களுக்கு அரசு வழங்கி இருக்கிறது என்று குண்டு போட்டார். அப்படி பார்த்தாலும் ஒரு ஆளுக்கு 0.62 பைசா. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகம் முழுவதும் இருப்பது 700 கோடி மக்கள்தான். ஆனால், தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் மட்டும் எப்படி 8,000 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்பது அவருக்கே வெளிச்சம்.இப்படி இத்யாதிகள் மூலம் மீம் க்ரியேட்டர்களுக்கு விருந்து வைத்த மதுவந்தி, அதன்பிறகு ஒரு வீடியோவை வெளியிட்டார்.அதில், “40 விழுக்காடு 20,000 கோடி ரூபாய் என்று தவறாகச் சொல்லிவிட்டேன். அதனால் மன்னிப்புக் கேட்கிறேன். நேர்காணல்களில் உளறியவர்கள் யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை.

மேடையில் துண்டு சீட்டை வைத்து பேசும் தலைவர் மன்னிப்பு கேட்கவில்லை. ஒரு கட்சிக்குத் தலைவர் ஆவதற்கான வரிசையில் ஒருவரின் பெயர் 28ஆவது இடத்தில் இருந்தது (?). ஆனால் அவர் தலைவராகி தற்போது அவரது ஒட்டுமொத்த குடும்பமும் அந்தக் கட்சியில் இருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

ஆனால், நான் கேட்கிறேன் ஏனெனில் நான் ஒரு இந்து” என்று ஒற்றுமைப் பத்திரம் வாசித்திருக்கிறார்.

அவரது இந்தப் பேச்சும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. முக்கியமாக, கருணாநிதி இறந்துபோய்விட்டார். ஆனால் தற்போது ஏன் அவரை மது இழுக்கிறார்.

மேலும், மூளை அதிகம் என்று கூறுவதில் மட்டும் தன்னை ஒரு பிராமணராக பிரகடனப்படுத்திக்கொள்ளும் மதுவந்தி, பிரச்னை, ட்ரோலிங் என்று வந்த பிறகுத் தன்னை ஒரு இந்துவாக முன்னிறுத்திக்கொள்கிறார். ஏன் பாஸிட்டிவிட்டிக்குப் பிராமண போர்வையையும், பிரச்னை ஏதும் வந்தால் இந்து போர்வையையும் இழுத்து போர்த்திக்கொள்கிறார்.

ஆக மொத்தம், உலகம் ஸ்தம்பித்து நிற்கும் சூழலிலும் வான்டடாக வந்து கன்டென்ட் கொடுக்கும் ‘மது’வுக்கு ஒரு சியர்ஸ் சொல்லி குவாரண்டைனை கொண்டாடிவருகின்றனர் நெட்டிசன்ஸ்.

Last Updated :Apr 13, 2020, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.