ETV Bharat / sitara

'கனிவான மனிதராக இருப்பதே உங்களை அழகாக்கும், உங்களது நிறமல்ல'

author img

By

Published : Jun 3, 2020, 1:18 AM IST

தனது சிறு வயதில் சந்தித்த நிறப் பாகுபாடு குறித்த அனுபவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

'கனிவான மனிதராக இருப்பதே உங்களை அழகாக்கும், உங்களது நிறமல்ல'
'கனிவான மனிதராக இருப்பதே உங்களை அழகாக்கும், உங்களது நிறமல்ல'

தமிழில் 'பேட்ட' திரைப்படம் மூலமாக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், மாளவிகா மோகனன். அதைத்தொடர்ந்து 'மாஸ்டர்' திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் கறுப்பின நபர் ஒருவர், காவலர் ஒருவரால் கொல்லப்பட்டு, பல நாடுகளில் பேசப்பட்ட சம்பவம் குறித்து, தன் சிறுவயது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் தனக்கு 14 வயது இருக்கும்போதே இந்தியர்கள் எவ்வாறு சகஜமாக இனப் பாகுபாட்டில் ஈடுபட்டிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

'எனக்கு 14 வயது இருக்கும்போது, எனது நண்பர் ஒருவரின் தாயார் தேநீர் அருந்தினால் தோலின் நிறம் கறுப்பாகும் என்று நம்பியதாகக் கூறினார். ஒரு நாள் என் நண்பர் தேநீர் கேட்டபோது, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீ தேநீர் அருந்தினால் அவளைப் போல் கறுப்பாகிவிடுவாய்' என்று கூறியுள்ளார். என் நண்பர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். அவர் சிவப்பாக இருப்பார். நான் ஒரு மாநிறமான மலையாளப் பெண். நிற வேறுபாடு இருக்கிறது என்பது எனக்கு அன்றுவரை தோன்றியதே இல்லை.

என் சருமத்தின் நிறம் குறித்த ஒரு கீழான கருத்தை கேட்ட அன்று, எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. ஏனெனில், முதல்முறையாக என்னைக் குறித்து அப்படி ஒரு கருத்தை ஒரு நபர் வெளிப்படுத்தியுள்ளார். நம்முடைய சொந்த சமூகத்திலேயே இதுபோன்று சகஜமாக இன வேறுபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கறுப்பான நபரை 'காலா' என்று அழைப்பது, நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவம்தான். தென்னிந்தியர்களுக்கும் வடகிழக்கை சேர்ந்தவர்களுக்கும் எதிராக நடத்தப்படும் இனப்பாகுபாடு நமக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. கறுப்பாக இருப்பவர்களை 'மதராஸி' என்று விசித்திரமான காரணத்துக்காக அழைக்கும் இந்த அப்பாவி மனிதர்கள், கறுப்பாக இருப்பவர்கள் அனைவரும் தென்னிந்தியர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவப்பாக இருப்பவர்கள் அழகுக்கு நிகர் ஆகவும்; கறுப்பாக இருப்பவர்கள் அசிங்கம் என்பதற்கு நிகராகவும் கருதுகிறார்கள். உலகெங்கும் இருக்கும் இனப்பாகுபாடு குறித்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்தும், நம் வீட்டில், நமது நட்பு வட்டத்தில், நம் சமூகத்தில் நடப்பது குறித்தும் விழிப்பாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் நிற வேறுபாடு, இனப்பாகுபாட்டை நீக்க நம்மால் முடிந்த பங்கை கொடுக்க வேண்டும். நல்லவராகவும் கனிவான மனிதராகவும் இருப்பதே உங்களை அழகாக்கும், உங்களது நிறமல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.