சென்னை: திரைத் துறையில், கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி எனப் பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார்.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ilayaraja-music-script-7205221_30092021110914_3009f_1632980354_984.jpg)
இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் ஆயிரத்து 416 படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் ஆதிராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் ஆயிரத்து 417ஆவது படமாகும்.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ilayaraja-music-script-7205221_30092021110914_3009f_1632980354_365.jpg)
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்தத் படத்தின் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் யுவலஷ்மி, அபிநயஸ்ரீ, மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-ilayaraja-music-script-7205221_30092021110914_3009f_1632980354_538.jpg)
'பியார் பிரேமா காதல்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். முதல் காதலை மறக்க முடியாமல் தவிக்கும் காதலர்களைப் பற்றிய இளமை துள்ளும் கதையாக 'நினைவெல்லாம் நீயடா' உருவாகிறது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பாடல்கள் புதுச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கின்றன.
இதையும் படிங்க: நினைவெல்லாம் ஞானியே - பிரமிக்க வைக்கும் இளையராஜாவின் பயணம்