இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ’காப்பான்’. இது கே.வி. ஆனந்த்- சூர்யா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். தெலுங்கிலும் நடிகர் சூர்யாவுக்கு பெரிய மார்கெட் உள்ளதால், காப்பான் படம் தெலுங்கில் ’பந்தோபஸ்த்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆர்யா, சாயிஷா, பூர்ணா, சமுத்திரக்கனி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே சூர்யாவுடன் இணைந்து காப்பானில் நடித்திருக்கிறது.
படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற காப்பானின் இசை வெளியீட்டு விழாவில், முன்னணி நடிகர் ரஜினி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், தெலுங்கில் முன் வெளியீட்டு நிகழ்வு பிரமாண்டமாக ஹைதராபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், படத்தின் நாயகன் சூர்யா, நாயகி சாயிஷா, இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, ”படத்தில் பிரதமரை காக்கும் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். உண்மையிலேயே அந்த பணி ரொம்ப கஷ்டமானது. பிரதமரை யாராவது சுட நேர்ந்தால், பாதுகாப்பு அதிகாரிகள்தான் பிரதமரை சூழ்ந்து காக்க வேண்டும். இதனால், அவர்களின் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படலாம். இருப்பினும், தங்களது உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார்கள். அவர்கள்தான் ரியல் ஹீரோகள் அவர்களுக்கு என்னுடைய சல்யூட்”, என்றார்.
அனைத்து பட வேலைகளும் முடிந்துள்ள நிலையில், காப்பான் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் செப்டம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளிவரவிருக்கிறது.