ETV Bharat / sitara

'தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ளோம்'

author img

By

Published : May 24, 2021, 10:45 PM IST

family
family

மும்பை: 'தி ஃபேமிலி மேன் 2' தொடர் வெளியாகும் வரை பொறுமையாக இருந்து பாருங்கள். நாங்கள் தமிழ் மக்கள், தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம் என அந்த தொடரின் இயக்குநர்கள் ராஜ் - டி.கே தெரிவித்துள்ளனர்.

நடிகர் மனோஜ் வாஜ்பாய், நடிகைகள் பிரியாமணி, சமந்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தொடர் 'தி ஃபேமிலி மேன் 2'. அமேசான் ப்ரைமில் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் வெற்றியை அடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை இரட்டை இயக்குநர்கள் ராஜ் - டி.கே ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த தொடர் மூலம் சமந்தா வெப் சீரிஸில் அறிமுகமாகிறார். 'தி ஃபேமிலி மேன் 2' தொடர் அமேசான் ப்ரைமில் ஜூன் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த தொடரின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாக தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னோட்டக் காட்சியில் இடம்பெற்றிருக்கின்ற காட்சியமைப்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்டப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்களவை உறுப்பினர் வைகோ உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், 'தி ஃபேமிலி மேன் 2' தொடரை அமேசான் ப்ரைமில் ஒளிப்பரப்ப மத்திய அரசு தடை செய்ய வேண்டும் எனக் கோரி அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

இதனையடுத்து 'தி ஃபேமிலி மேன் 2' தொடர் குறித்து அத்தொடரின் இயக்குநர்கள் ராஜ் - டி.கே ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ் மக்கள், தமிழ் பண்பாட்டின் உணர்வுகளை நாங்கள் நன்கு அறிவோம். தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பையும் மரியாதையும் வைத்துள்ளோம். இந்தத் தொடர் வெளியாகும்வரை அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து பார்க்கவும். தொடரை பார்த்தபின் உங்களது கருத்துகளைப் பகிருங்கள்" என தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.