‘பிகில்’ படத்தில் பெற்ற சம்பளம் தொடர்பாக மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது பனையூர் இல்லத்தில் இந்த சோதனை நடைபெற்றது. ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் இல்லத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து, விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மார்ச் 15ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில், ஆளும் அரசாங்கத்தை விஜய் விமர்சனம் செய்துவிடுவார் என்ற அச்சத்தினால்தான் இந்த ரெய்ட் நடைபெற்றது என விஜய் ரசிகர்கள் கருதுகின்றனர். கடந்த மாதம் ‘மாஸ்டர்’ படப்பிடிப்புக்காக நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் அழைத்து வந்து 24 மணி நேரத்துக்கு மேல் விசாரணை செய்தனர். ஆனால் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக எந்த ஆவணங்களும் அவர்களுக்கு சிக்கவில்லை. தற்போது மீண்டும் சோதனை செய்துள்ளனர்.
இந்த சூழலில், ‘மாஸ்டர்’ ஷூட்டிங்கை முடித்த விஜய் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். மார்ச் 15ஆம் தேதி படத்தின் இசை வெளியீடன்றுதான் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.