சென்னை: சூர்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியீடு
எளிய மக்களின் சமூகவியல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நையாண்டித்தனத்துடன் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படத்தின் பிரத்யேக காட்சி, செப். 24, உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
அமேசான் பிரைம் வீடியோ, 2டி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் முன்னோட்டத்தை, நடிகர் சூர்யா வெளியிட்டார். இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சமூக நையாண்டி திரைப்படமான 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ஒரு கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியுள்ளது.
மனிதநேய உணர்வுகள் நகைச்சுவையுடன் கலந்து சொல்லப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகேசன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா படத்தை தயாரித்திருக்கிறார்.
காணாமல் போன காளையை தேடும் கதை
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில், ஒட்டுமொத்த இந்தியாவும் அதன் இதய பகுதியாக திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது. அங்கு 35 வயதான குன்னிமுத்து என்ற விவசாயி, தன் மனைவி வீராயி என்பவருடன், காணாமல் போன தன்னுடைய பெற்றெடுத்த பிள்ளைகளைப் போல் வளர்த்த கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற இரண்டு காளைகளை தேடுகிறார்கள்.
இந்த தேடலில் அவர்கள் ஈடுபட்டிருக்கும்போது உள்ளூர் காவல் துறையினரும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான நடவடிக்கைகளில் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அப்போது ஏற்படும் சுவாரஸ்யமான மற்றும் எதிர்பாராத திருப்பங்களை நகைச்சுவை ததும்ப சொல்லும் வகையில் கதை பயணிக்கிறது.
இந்தப் படம் தொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் உள்ளடக்க தேர்வுக்குழு தலைவர் விஜய் சுப்பிரமணியம் கூறியதாவது,
'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் இதய பூர்வமான மனிதர்களின் உணர்வுகளை சொல்லும் கதை. சூழலுக்கேற்ற நகைச்சுவையுடன் கூடிய இப்படத்தின் திரைக்கதை, பார்வையாளர்களின் உணர்வுகளுடன் எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின்படி முதல் வெளியீடாக இந்தப் படம் வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோ, எப்பொழுதும் வித்தியாசமான கதை சொல்லும் படைப்புகளை ரசனையுடன் தேடி, பார்வையாளர்களுக்கு வழங்குகிறது என்றார்.
படத்தைப் பற்றி இயக்குநர் அரிசில் மூர்த்தி கூறியதாவது:
இந்த திரைப்படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. இதயப்பூர்வமான கதையை உயிர்ப்புடன் திரையில் கொண்டுவர படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சோர்வின்றி உழைத்தனர்.
படத்தில் கதையின் நாயகனான குன்னிமுத்துவின் தேடலில் அனைவருக்கும் பொதுவான உணர்வு பதுங்கி இருப்பதாகவே கருதுகிறேன். இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாவதால் சர்வதேச பார்வையாளர்களை சென்றடையும். இதனால் மகிழ்ச்சியடைகிறேன்.
இருப்பினும் இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போலவே, அவர்களும் படத்தைக் காணும்போது சந்தோசம் அடைவார்கள் என நம்புகிறேன்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா கூறியதாவது:
'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படத்தின் முன்னோட்டத்தை பார்வையாளர்களுக்காக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையில் இடம்பெறும். நகைச்சுவையுடன் கூடிய மனித நேய உணர்வு சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீட்டுக்காக நாங்கள் அமேசான் பிரைம் வீடியோவுடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
இதையும் படிங்க: அனபெல் சேதுபதி படம் எப்படி இருக்கும்? - இயக்குநர் சுவாரசிய தகவல்