கோவிஷீல்டு - கோவாக்சின் கலவை குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!

author img

By

Published : Aug 11, 2021, 2:00 PM IST

Covaxin Covishield

கரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் டோஸ்களை கலந்து உபயோகிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு இந்த ஆய்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக அதிகப்படியான எண்ணிக்கையில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகள் கோவாக்சின், கோவிஷீல்ட். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்தும்போது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் முன்னதாகத் தெரியவந்தது.

ஒன்றிய அரசு ஒப்புதல்

vaccine
தடுப்பூசி

இந்நிலையில், கோவாக்ஸின் கோவிஷீல்ட் டோஸ்களை கலந்து உபயோகிப்பது குறித்து ஆய்வு நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி அயோக் உறுப்பினர் மருத்துவர் வினோத் குமார் பால் தெரிவித்தார். மேலும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு இந்தத் தடுப்பூசி மருந்துகளின் கலவை குறித்த ஆய்வுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் 18 பேருக்கு இந்த கோவாக்சின் - கோவிஷீல்டு கலவை மருந்து செலுத்தப்பட்டு நல்ல முடிவுகள் எட்டப்பட்டன.

லண்டனில் தடுப்பூசி மருந்துக் கலவை சோதனை

முன்னதாக இதேபோல் கரோனா முதல், இரண்டாம் டோஸ்களுக்கு இருவேறு கரோனா தடுப்பூசிகளை செலுத்துவது சிறந்த பலன்களைத் தருகிறது என லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்தன. ஃபிசர், ஆஸ்ட்ரஜெனெகா ஆகிய தடுப்பூசி மருந்துகளின் கலவைகள் இந்த சோதனைகளின்போது பயன்படுத்தப்பட்டன.

50 வயதைக் கடந்த மொத்தம் 850 தன்னார்வலர்களுக்கு இந்த மருந்துகள் நான்கு வாரங்களாக செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசி ஆயுள் வரை பாதுகாப்பு தரும் - ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.