ETV Bharat / opinion

பிரதமரின் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு உள்ளிருந்து கிளம்பும் எதிர்ப்பு

author img

By

Published : Feb 18, 2021, 9:38 AM IST

Bharatiya Mazdoor Sangh
Bharatiya Mazdoor Sangh

ராஷ்ட்ரியா சேவா சங் (ஆர்எஸ்எஸ்) என்ற அமைப்புடன் இணைவுகொண்ட பாரதிய மஜ்டூர் சங்க்-கின் (பிஎம்எஸ்) தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கொண்ட உச்சப் பகுதியான கேந்திரிய கார்ய சமிதி (கேகேஎஸ்), பொது நிறுவனங்களிலிருந்து அரசின் முதலீட்டை ராஜதந்திரமாக விலக்கிக் கொள்ளும் நரேந்திர மோடி அரசின் கொள்கையை எதிர்ப்பது என்று முடிவு செய்திருக்கிறது. அதைப் பற்றிய ஈடிவி பாரத் துணை செய்தி ஆசிரியர் கிருஷ்ணானந்த் திரிபாதியின் செய்தித் தொகுப்பு.

பொது நிறுவனங்களிலிருந்தும், அரசு வங்கிகளிலிருந்தும் அரசின் முதலீட்டை ராஜதந்திரமாக விலக்கிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம் ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைவுகொண்ட 44 கிளை அமைப்புகளில் ஒன்றான பாரதிய மஜ்டூர் சங்கின் (பிஎம்எஸ்) கடும் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று ஈடிவி பாரத்திற்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

பிஎம்எஸ் பொதுச்செயலாளர் பினோய் குமார் சின்ஹா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய, கடுமையான வார்த்தைகள் கொண்ட தனது கடிதத்தில் அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்ளுதல், மத்தியப் பொது நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ராஜதந்திரமாக விற்று பணமாக்குதல் என்ற அரசின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

கடிதத்தின் பிரதி ஒன்று ஈடிவி பாரத் பார்வைக்கு வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் சின்ஹா ரயில்வே மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை வாரியம் (ஆர்ட்னென்ஸ் ஃபாக்டரி போர்டு – ஓஎஃப்பி) ஆகியவற்றைத் தனியார் பெருநிறுவனமயமாக்குதலை எதிர்த்துப் பேசியுள்ளார்.

“அரசின் முதலீட்டை விலக்கிக் கொள்ளுதல், மத்தியப் பொது நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றை தனியார் பெருநிறுவனங்களிடம் விற்று பணமாக்குதல் என்று உங்கள் பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கும் தீர்மானம் கடினமாக உழைக்கும் வர்க்கத்தினராகிய தொழிலாளர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் உணர்வுகளையும் கடுமையாகப் புண்படுத்திவிட்டது” என்று பினோய் சின்ஹா அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

பிஎம்எஸ்-ஸின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம்கொண்ட உச்ச அமைப்பான கேந்திரிய கார்ய சமிதி (கேகேஎஸ்) இந்தப் பிரச்சினையை மூன்று நாள்கள் சென்னையில் விவாதித்திருக்கிறது.

சில தகவலின்படி, ஒரு மூத்த ஆர்எஸ்எஸ் கட்சிக்காரரும் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அந்தக் கூட்டம் பிப்ரவரி 12இல் தொடங்கி 14இல் முடிந்தது. அப்போது பிஎம்எஸ் பிரதமர் மோடி அரசின் தனியார்மயமாக்கல் முயற்சிக்கு எதிராகப் பல தீர்மானங்களைக் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றியது.

மூன்று நாள்களும் சென்னையில் நடந்த கூட்டத்தில் அந்த மூத்த ஆர்எஸ்எஸ் கட்சிக்காரரின் முன்னிலையில் பிரச்சினை விவாதிக்கப்பட்டதால், அரசின் பேரார்வம் மிக்க தனியார்மயமாக்குதல் திட்டத்திற்கு எதிராக பிஎம்எஸ்-ஸின் கேகேஎஸ் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவு இருக்கிறது என்று ஈடிவிக்கு வந்த ஒரு தகவல் கூறியது.

“எதிர்காலத்தில் நாங்கள் நடத்தப் போகின்ற போராட்டங்களை விலக்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் (ஆர்எஸ்எஸ்) எங்களைக் கேட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஒரு மூத்த ஆர்எஸ்எஸ் கட்சிக்காரரின் முன்னிலையில்தான் எங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன” என்று சொன்னது அந்தத் தகவல்.

அரசு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிலக்கரி, நிலக்கரி அல்லாத தொழில், சிமெண்ட், பொறியியல், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இயங்கும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து அரசு முதலீட்டை விலக்கிக் கொள்ளப்போகும் மத்திய அரசின் தீர்மானத்தை பிஎம்எஸ் கடுமையாக எதிர்க்கும் என்று கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள் ஆணித்தரமாகச் சொல்லிவிட்டன.

பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதமும், “அரசின் இந்தக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேகேஎஸ் தீர்மானித்து இருக்கிறது,” என்று சொல்லி இருக்கிறது.

விசாகப்பட்டினம் எஃகு ஆலைப் போராட்டம்

கடிதத்தின் பிரதி ஒன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையைத் தனியார்மயமாக்க அரசு எடுக்கும் முயற்சியையும் பிஎம்எஸ் எதிர்க்கிறது என்று கடிதம் குறிப்பிட்டுள்ளது.

”விசாகப்பட்டினம் எஃகு ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம் சமூகப் போராட்டமாக மாறிவிட்டது என்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது. ஏனென்றால் அரசின் தீர்மானம் பொதுமக்களைத் தாங்க முடியாத அளவுக்கு சீண்டிப் பார்ப்பதாக மாறிவிட்டது” என்று சின்ஹா கடிதத்தில் சொல்லி இருக்கிறார்.

ஈடிவி பாரத்துடன் தனியாகப் பேசுகையில், சிஐடியூ (சென்டர் ஆஃப் டிரேட் யூனியன்ஸ்) தேசிய பொதுச்செயலர் தபான் சிங், என்னதான் அரசு தனியார்மயமாக்கல் கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்டிற்குச் சொந்தமான விசாகப்பட்டினம் எஃகு ஆலை உள்பட எந்தவொரு மத்திய பொது நிறுவனத்தையும் தனியார் பெருநிறுவனம் கையகப்படுத்துவதைத் தொழிலாளர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொன்னார்.

மேலே குறிப்பிட்ட துறைகளில் பணிசெய்யும் உழைப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம்எஸ் தலைவர்கள் ஹைதராபாத்தில் பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் கூடி எதிர்காலச் செயல்திட்டம் பற்றி முடிவெடுப்பார்கள் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் பிஎம்எஸ் தெரிவித்திருக்கிறது.

“ஆனால் எதிர்ப்பையோ அல்லது போராட்டத்தையோ தொடங்குவதற்கு முன்பு நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விரும்புகிறோம்” என்று சொல்லும் பிஎம்எஸ் பொதுச்செயலாளர் சின்ஹா உடனடியாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும்பொருட்டு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டார்.

பிஎம்எஸ்-ஸின் எதிர்ப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

நாக்பூரைக் களமாகக் கொண்ட ராஷ்ட்ரியா சுயம்சேவா சங்கம் (ஆர்எஸ்எஸ்) மத்தியில் ஆட்சி நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியல் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அந்த ஆர்எஸ்எஸ் என்ற இயக்கத்துடன் இணைவுகொண்ட நாற்பத்தி நான்கு அமைப்புகளில் பாரதிய மஜ்டூர் சங்-கும் (பிஎம்எஸ்) ஒன்று.

அடுத்த மாதம் வங்கி ஊழியர்கள் சங்கங்களும், அலுவலர்கள் சங்கங்களும் இணைந்து நடத்தப் போகும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதா, வேண்டாமா என்பது பற்றி இன்னும் ஒரு முடிவான தீர்மானத்தை பாரதிய மஜ்டூர் சங் எடுக்கவில்லைதான்.

ஆனால் ஏற்கனவே அரசுக்கு எதிரான மனநிலையில் இப்போது இருக்கும் பாரதிய மஜ்டூர் சங் ஒருவேளை வங்கிப் போராட்டத்தில் கலந்துகொண்டால் அது பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் சவால்களை மேலும் சிக்கலாக்கிவிடும். அவருடைய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் பலத்த போராட்டம் வேறு மோடிக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியைப் போலவே பாரதிய மஜ்டூர் சங்-கும் ஆர்எஸ்எஸ்ஸின் ஓர் இணைப்பு அமைப்புதான். அது மட்டுமல்ல, பாரதிய மஜ்டூர் சங் மத்திய தொழிலாளர்களின் சங்கமும்கூட. அது 6,000 தொழிலாளர் சங்கங்களையும், இரண்டு கோடிக்கும் மேலான உறுப்பினர்களையும் கொண்ட ஆகப்பெரிய உழைப்பாளர் இயக்கம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.