டெல்லி: நாட்டின் சிறந்த முதலமைச்சராக ஒடிசா மாநில முதலமைச்சரை ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவு செய்துள்ளது.
2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் சூழலில், சிறந்த முதலமைச்சர்கள் முதல் நாட்டின் மோசமான முதலமைச்சர்களைப் பகுப்பாய்வு செய்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் பட்டியல் வெளியிட்டுள்ளது.
அதில், ஒடிசா மக்கள் 68.57% விழுக்காடு முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் ஆட்சி மிகவும் திருப்திகரமானது என்று பதிலளித்து முதலிடத்தை அவருக்குப் பரிசளித்துள்ளனர். அதே நேரத்தில் 10% விழுக்காடு மக்கள் மட்டுமே இவரது ஆட்சி திருப்திகரமாக இல்லை என்றும் 20% விழுக்காடு பேர் ஓரளவிற்குத் திருப்தி என்றும் பதிலளித்துள்ளனர்.
முறையே இரண்டாம் இடத்தை தட்டிச்சென்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சியில் 57% விழுக்காடு மக்கள் திருப்தியடைந்ததாகவும், 31.65 விழுக்காடு மக்கள் ஓரளவு திருப்தியடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் இடத்திலுள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு 66.31% விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தாலும், மொத்த கணக்கெடுப்பின் முடிவில் அவர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். 16.52 விழுக்காடு மக்களே இவர் ஆட்சி ஓரளவு திருப்பியளித்ததாகக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து நான்காவது இடத்தில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும், ஐந்தாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும், ஆறாவது இடத்தில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலும், ஏழாவது இடத்தில் மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், எட்டாவது இடத்தில் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானும் இடம்பெற்றுள்ளனர்.