ETV Bharat / jagte-raho

மாநகரப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு: கணவரைப் பார்க்கச் சென்றபோது நேர்ந்த துயரம்!

author img

By

Published : Nov 5, 2020, 3:03 PM IST

Woman killed
Woman killed

விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்றுவரும் கணவரைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மாநகரப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை : ஐ.சி.எஃப். தாகூர் நகரைச் சேர்ந்தவர் மிஸ்ஜா. இன்று இவர், விபத்தில் சிக்கி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் கணவரைப் பார்ப்பதற்காக, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ஐ.சி.எஃப்.லிருந்து அயனாவரம் செல்லும் சாலையில், தாகூர் நகர் மூன்றாவது தெரு எதிரே சென்றுகொண்டிருந்தபோது, வள்ளலார் நகரிலிருந்து புதூர் செல்லும் மாநகரப் பேருந்து, மிஸ்ஜாவின் வாகனத்தில் மோதியுள்ளது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த மிஸ்ஜா, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மிஸ்ஜாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து, திருமங்கலம் போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜனை கைதுசெய்து, மாநகரப் பேருந்தையும் பறிமுதல்செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தாகூர் நகர் பகுதி திருப்பத்தில் வருடா வருடம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், பலருக்கு படுகாயம் ஏற்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேகத்தடை அமைக்கக்கோரி பலமுறை வலியுறுத்தியும் போக்குவரத்துக் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமலும், தாங்களே வேகத்தடையும் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கவில்லை எனவும் பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து அயனாவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து செல்லவைத்தனர்.

இதையும் படிங்க : சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கட்டட தொழிலாளி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.