ETV Bharat / jagte-raho

வந்தவாசி அருகே மாயமான தாய், பிள்ளைகள் சடலமாக மீட்பு!

author img

By

Published : Feb 9, 2021, 8:56 AM IST

3 found dead in thiruvannamalai
3 found dead in thiruvannamalai

வந்தவாசி அருகே மாயமான தாய், இரு மகள்கள் இரண்டு நாள்களாக தேடப்பட்டுவந்த நிலையில் நேற்று (பிப். 8) கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.

திருவண்ணாமலை: மாயமான தாயுடன் சேர்த்து இரு குழந்தைகள் சடலமாக கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வந்தவாசி அடுத்த செங்கல்வராயபுரம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சகுந்தலா (29). இவர்களுக்கு ஹரி ஸ்ரீ (8), தீபஸ்ரீ (5) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இச்சூழலில் பிப்ரவரி 6ஆம் தேதி சகுந்தலா தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், மாலை நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவரும், உறவினர்களும் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இச்சூழலில் செங்கல்வராயபுரம் மோட்டூர் பகுதியிலுள்ள வேளாண் கிணற்றில் சடலங்கள் இருப்பதாக வடவணக்கம்படி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், அவர்கள் மாயமான சகுந்தலாவும், அவரின் குழந்தைகளும் என்று கண்டறிந்து, சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.