ETV Bharat / international

பெருந்துயரில் இலங்கை - அத்தியாவசியத்திற்கு அலைக்கழிக்கப்படும் மக்கள்

author img

By

Published : Mar 26, 2022, 8:12 PM IST

Updated : Mar 27, 2022, 1:11 PM IST

Srilanka Economic Crisis
Srilanka Economic Crisis

இலங்கையின் திருக்கோணமலை, மட்டகளப்பு, வவுனியா, நுவரெலியா ஆகிய பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்கள், எரிபொருள் போன்றவற்றின் விலையேற்றத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அந்தவகையில், திருகோணமலை, மட்டகளப்பு, வவுனியா ஆகிய பகுதிகளில் மக்கள் சமையல் எரிவாயுவிற்கும், மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்படுகின்றது.

இதற்கான நடவடிக்கைகள், ராணுவத்தின் பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படும் நிலையில், எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நின்று எரிபொருளைப்பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் பல உணவகங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பெருந்துயரில் இலங்கை - அத்தியாவசியத்திற்கு அலைக்கழிக்கப்படும் மக்கள்

சாலை மறியலில் மக்கள்: இதேபோன்று, வவுனியா மாவட்டத்தில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளும், பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் கொட்டகலை எனும் நகரில் கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மானிய விலையில் சமையல் எரிவாயுவை வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் இன்று (மார்ச் 26) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2800 ரூபாய்க்கு தான் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ள போதிலும், கடை உரிமையாளர்கள் சுமார் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கொதிப்படைந்த மக்கள், பிரதான சாலையில் இறங்கி போராடினர். நியாயமான விலையில் சமையல் எரிவாயு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆட்டோ ஓட்டு

இதையடுத்து, போலீசாரின் தலையீட்டுடன் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதுமட்டுமின்றி, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்களின் விலை 30 முதல் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது என அத்தியாவசிய பொருள்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சக்கரை, பருப்பு, அரிசி ொஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவிலிருந்து கடனுதவி பெறப்பட்டதன் பின்னர், தற்போதுள்ள டாலருக்கான மதிப்பு குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் கைதிகள் விடுவிப்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்தா ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கைதிகள் விடுதலை, சிறப்பு நிதியம் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக, சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, விரைவில் விடுதலை செய்வதற்கும் அதிபர் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கில் ராணுவ தேவைக்காக நிலங்களை கையகப்படுத்தாமல் இருப்பதாகவும் அரசு உறுதியளித்துள்ளது எனக் கூறப்படுகிறது. இலங்கையின் கடன் பிரச்சினைக்கு இந்தியா நிதியதவி அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடி வரும் மார்ச் 31ஆம் தேதி இலங்கைக்கு செல்ல இருப்பது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கையில் பெரும் பொருளாதார வீழ்ச்சி - அத்தியாவசியப் பொருள்களே ரூபாய் ஆயிரத்தை தாண்டியது!

Last Updated :Mar 27, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.