ETV Bharat / international

உளவு பலூன் விவகாரம்: சீனாவுக்கு நோ சொன்ன அமெரிக்கா.. என்ன தான் பிரச்சினை?

author img

By

Published : Feb 4, 2023, 9:59 AM IST

உளவு பலூன்
உளவு பலூன்

அமெரிக்கா மொன்டனா அணுசக்தி ஏவுதள பகுதியில் சீனாவின் உளவு பலூன் பறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது லத்தீன் அமெரிக்கா வான் பரப்பில் மேலும் ஒரு பலூன் பறந்தது கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: லத்தீன் அமெரிக்கா வான்பரப்பில் மீண்டும் ஒரு சீன உளவு பலூன் பறந்ததை கண்டறிந்ததாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. உளவு பலூன் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இரு தரப்பு உறவுகள் பாதிக்கும் நிலை ஏற்படுவதாக பெண்டகன் செய்தி தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா மொன்டானா பகுதியில் அமைந்துள்ள அணுசக்தி ஏவுதளம் மீது முதல் முறையாக வெள்ளை பலூன் பறப்பது கண்டறியப்பட்டது. அது சீன உளவு பலூன் என தெரிய வந்ததும், அதை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு செய்தால் ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக பேட்ரிக் ரைடர் தெரிவித்தார்.

தற்போது லத்தீன் அமெரிக்கா வான்பரப்பில் இரண்டாவது முறையாக உளவு பலூன் பறப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உளவு பலூன் பறந்ததற்கான தரவுகளை கொண்டு இருப்பதாகவும், அதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் முஇதலிவடக்கு அமெரிக்க வான்பரப்பில் பதற்றம் மிகுந்த பகுதியில் உளவு பலூன் பறந்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் சீன மேற்கொள்ள இருந்த பயணம் தள்ளி போடப்பட்டுள்ளது. அமெரிக்க வான்வெளியில், சீனாவின் உளவு பலூன் பறந்திருப்பது, அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் என தெளிவாக தெரிவதாக பிளிங்கன் தெரிவித்தார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அது ஒரு ஆகாய விமானம். வானிலை ஆய்வு தொடர்புடைய பணியில் ஈடுபட கூடிய நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டது. காற்று பாதிப்பால் திட்டமிட்ட இலக்கை விட்டு அது திசைமாறி தொலைவுக்கு சென்று விட்டது” என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “அமெரிக்க வான்பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக எங்களது தரப்பில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இதில் எந்த ஒரு நோக்கமும் இல்லை. இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்த சூழலை பற்றி விளக்குவோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட்ரிக் ரைடர், "உளவு பலூன் தொடர்ந்து கிழக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க கண்ட பகுதி மையத்தின் மேல் செல்கிறது. உளவு பலூனால் ராணுவம் மற்றும் பொது மக்களுக்கு உடலியல் சார்ந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவில்லை என்றார்.

தொடர்ந்து அதனை கண்காணித்து முடிவுகளை பற்றி ஆய்வு செய்வோம் என்று கூறினார். சீனா அளித்துள்ள விளக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "சீன அரசின் விளக்கம் பற்றி நன்றாக எங்களுக்கு தெரியும். ஆனால், உண்மை என்னவெனில் அது ஒரு உளவு பலூன். அது அமெரிக்க வான்வெளி அத்துமீறி பறந்து சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது. அது ஏற்று கொள்ளப்பட முடியாதது. இதனை நாங்கள் சீன அரசிடம் நேரடியாகவே தூதரக அளவில் தெரிவித்து விட்டோம் என்றார்.

இதையும் படிங்க: ADHD நோயால் பாதிக்கப்பட்ட கேரள சிறுவனின் படைப்பு.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.