ETV Bharat / international

துபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் மாநாடு… இன்று பிரதமர் மோடி பங்கேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 11:31 AM IST

COP28 Dubai: துபாயில் இன்று நடைபெறும் 28வது உலக காலநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசவுள்ளார்.

28th conference of the parties on climate pm modi visit to Dubai
துபாய் சென்ற மோடிக்கு இந்திய மக்கள் வரவேற்ப்பு

துபாய்: ஐக்கிய நாடுகள் சபையின் உலக காலநிலை மாற்றத்துக்கான 28வது மாநாடு நேற்று துபாயில் தொடங்கிய நிலையில், இம்மாநாடு டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு துபாய் சென்றடைந்தார்.

இது குறித்து அவர் தனது X தளத்தில், “துபாயில் உள்ள இந்தியர்கள் அளித்த வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் அளிக்கும் ஆதரவும், உற்சாகமும் தான் உறுதியான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. ஒரு சிறந்த புவியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு COP-28 மாநாட்டில் பங்கேற்பதற்காகத் துபாய் வந்துள்ளேன். மாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த ஆண்டு நடைபெறும் cop28 மாநாடு, உலகின் பல நாடுகளில் நடந்த இயற்கை பேரழிவு, காட்டு தீ, அதிகரித்த பூமியின் வெப்பம் போன்றவை குறித்து நடைபெற உள்ளது. ஏனெனில் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வெப்பமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவாகி இருப்பதாகவும், இது குறித்து உடனடி நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி துபாயில் காலநிலை மாற்றத்திற்கான மாநாடு நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள உலக பருவநிலை உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த அமர்வாகக் கருதப்படுகிறது. இந்த அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளார். குறிப்பாக, காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டினை கட்டுப்படுத்துதல் போன்றவை முதன்மையான கருத்தாக முன்வைக்கப்பட்டுப் பேசப் பட உள்ளது என மோடி தெரிவித்திருந்தார்.

துபாய் பயணத்துக்கு முன்னதாக மோடி வெளியிட்ட அறிக்கையில், “நமது ஜி 20 மாநாட்டின் போது, காலநிலை பிரச்சனை தான் முக்கிய வாதமாக இருந்தது. அதைப்போல இந்த COP28 மாநாட்டிலும் இந்த பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள மூன்று நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் என 70 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

Copன் முக்கியத்துவம்: ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் காலநிலை மாற்ற மாநாடு 1995ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் மாநாட்டில் உலகத் தலைவர்கள், அரசாங்க பிரதிநிதிகள் பங்கேற்று, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதைச் செயல்படுத்துவதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவது சம்பந்தமாகவும் விவாதிப்பார்கள்.

இதையுன் படிங்க: துபாயில் நடக்கும் காலநிலை மாற்ற மாநாடு..! இந்தியாவின் எதிர்பார்ப்புகள் என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.