பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்திய கடற்படையின் முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ், 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின், ஆப்கானிஸ்தானில் வர்த்தகம் செய்து வந்த குல்பூஷன் ஜாதவை கடத்திவந்து, அவர் மீது பாகிஸ்தான் வீண் பழி சுமத்துகிறது என இந்தியா தெரிவித்தது.
இதையடுத்து, குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஐக்கிய ஒன்றியத்தை அணுகி ஐந்து முக்கிய கோரிக்கைகளை இந்தியா முன்வைத்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது கருத்து பதிவிட்டுள்ளார். அதில், சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பை தான் வரவேற்கிறேன். குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அறிவிக்கவில்லை. பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் குல்பூஷன் ஜாதவ் செயல்பட்டுள்ளார். அதனால் பாகிஸ்தான் சட்டப்படியே குல்பூஷன் நடத்தப்படுவார் என தெரிவித்தார்.