இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் பங்கேற்கும் மலபார் வரிசை கடற்பயிற்சி கடந்த 1992ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. பின்னர் 2015இல் இந்த பயிற்சியில் ஜப்பான் நாடும் இணைந்து கொண்டது. இதையடுத்து, பல ஆண்டுகளும் வெற்றிகரமாக இந்த மூன்று நாடுகளும் கூட்டு பயிற்சியை பல்வேறு நாடுகளில் நடத்தி வந்தது.
இந்நிலையில், இந்தாண்டு நான்காவது நாடாக ஆஸ்திரேலியாவும் கலந்து கொண்டது. நான்கு நாடுகளும் இணைந்து கடந்த மாதம் மலபார் கடற்படை கூட்டுப் போர்ப் பயிற்சி வங்கக் கடலில் நடத்தின.
தற்போது, இரண்டாவது கட்ட போர் பயிற்சி இன்று அரபிக் கடலில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவின் கடற்படையைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் பங்கேற்கவுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், “இந்த கூட்டு போர்ப் பயிற்சி ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா, யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கப்பல்களை மையமாக வைத்து நடைபெறும். இதுமட்டுமின்றி 4 நாடுகளின் கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களும் பங்கேற்கிறது.
இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் தல்வார், ஐஎன்எஸ் கந்தேரி, ஐஎன்எஸ் தீபக் ஆகிய கப்பல்களும், ஹெலிகாப்டர்கள், பி-8ஐ கடற்சார் கண்காணிப்பு விமானமும் இந்த பயிற்சியில் இணையவுள்ளன” என்றார்