ETV Bharat / international

ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயம் : அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்

author img

By

Published : Feb 12, 2020, 2:19 PM IST

iran attack
iran attack

வாஷிங்டன் : ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 109 பேருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த மாதம் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 109 அமெரிக்க படையினருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ தலைமைகமான பெண்டகன் தற்போது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெண்டகன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஈராக்கின் அல்-அசாத் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் அமெரிக்க வீரர்களுக்கு முளையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பு 64ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 109 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 76 பேர் பணிக்கு திரும்பியுள்ள நிலையில், 26 பேர் ஜெர்மனி, அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற ஏழு பேர் ஈராக்கில் இருந்து ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்" எனக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ தளபதி மார்க் மிலே கூறுகையில், "இதுபோன்ற ஏவுகணை தாக்குதல் பாதிப்புகள் இரண்டு ஆண்டுகள் கழித்து பெரியளவில் தெரிய வாய்ப்பு உள்ளது" என்றார்.

பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாரட்டிப் பேசிய பெண்டகன் செய்தித் தொடர்பாளர் அலிசா ஃபரா, "மருத்துவர்கள் அளித்த சிகிச்சை காரணமாக 70 சதவீத வீரர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். பாதுகாப்பு படை வீரர்களின் உடல், மன நலத்தை பேண வேண்டியது அவசியம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க : சுலைமானி கொலைக்கு காரணமான சிஐஏ அலுவலர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.