ETV Bharat / international

ட்ரம்பின் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் கண்டனம்!

author img

By

Published : Jun 4, 2020, 5:14 PM IST

trump
trump

வாஷிங்டன்: நிறவெறிக்கு எதிராக அமெரிக்காவில் வலுத்துவரும் போராட்டத்தை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கும் ட்ரம்பின் திட்டத்துக்கு அந்நாட்டு பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஜிம் மாட்டிஸ் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர், அந்நகர காவல் துறையினரால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டு, கறுப்பின அமெரிக்கர்கள் மீதான வெள்ளை இனவெறிக்கு எதிராகக் கண்டன குரல் எழுப்பியவாறு, அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விஸ்வரூபம் எடுத்துவரும் இந்தப் போராட்டம் அதிபர் ட்ரம்பை எரிச்சலூட்டியுள்ளது. போராட்டத்தில் ஆங்காங்கே கலவரம் வெடிப்பதால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என மாகாண ஆளுநர்களுக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துவருகிறார்.

இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் ட்ரம்ப், போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தைக் களமிறக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகு றித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஜிம் மாட்டிஸ், "எனது வாழ்க்கையில் டொனால்ட் ட்ரம்பை போன்ற ஒரு அதிபரை பார்த்ததில்லை. அமெரிக்க மக்களை ஒற்றுமையாய் வழிநடத்த வேண்டும் என அவர் ஒருநாளும் முயன்றதில்லை. அப்படிச் செய்வதுபோல நடித்துவருகிறார். நம்மைப் பிரித்தாளுவதே அவரின் நோக்கம். அனுபவம் இல்லாத ஆளுமையின் விளைவுகளே இவை" எனப் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

எனினும், போராட்டம் கைமீறிச் சென்றால் அதனைத் தடுக்க 82ஆவது விமானப் படைப்பிரிவைத் தயாரான நிலையில் வைத்திருக்குமாறும் ஜிம் மாட்டிஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜிம் மாட்டிஸ், சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையை விலக்கிக் கொள்ளும் ட்ரம்பின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்து டிசம்பர் 2018ஆம் ஆண்டு பதவி விலகினார்.

இதையும் படிங்க : ராணுவத்தைக் களமிறக்கப் போகிறேன் - ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.