ETV Bharat / entertainment

கேப்டன் மில்லர் பட விழாவில் அத்துமீறலா? ஐஸ்வர்யா கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 1:29 PM IST

captain miller movie actress slap dhanush fan who misbehaved with her in movie pre-release event
கேப்டன் மில்லர் பட விழாவில் அத்துமீறலா?

Captain Miller Pre-Release Event: கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறி, தனுஷ் ரசிகரை ஆவேசத்துடன் சட்டையைப் பிடித்து தாக்கிய நடிகை ஐஸ்வர்யாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியானது, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜன.03) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக படத்தில் நடித்திருந்த திரைப் பிரபலங்கள் உள்பட 2000-க்கும் மேற்பட்ட தனுஷ் ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியானது மாலை 6 மணிக்கு தொடங்குவதாக சொல்லப்பட்டிருந்த நிலையில், இரவு 8 மணிக்கு தொடங்கி சுமார் 12 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து திரைப்பிரபலங்கள் அனைவரும் வெகுவாக வெளியேறிய நிலையில், ரசிகர்களும் வெளியேறி வந்துள்ளனர்.

அப்போது, அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சினிமா நிகழ்ச்சி தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியிடம், ரசிகர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபரை, தொகுப்பாளினி ஐஸ்வர்யா, மிகுந்த ஆவேசத்துடன் அடித்து, தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அந்த ரசிகர், ஐஸ்வர்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நிலையில், அந்த ரசிகர் அரங்கத்தில் இருந்து வெளியில் செல்லும் வரை, மிகுந்த ஆவேசத்துடன் கூச்சலிட்டு சட்டையைப் பிடித்து தாக்கியுள்ளார், ஐஸ்வர்யா. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த தொகுப்பாளினி, சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மன்சூர் அலிகானின் சரக்கு திரைப்பட நிகழ்ச்சியில், கூல் சுரேஷால் மாலை அணிவிக்கப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இது போன்று பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவது இல்லை என திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட தொகுப்பாளினி ஐஷ்வர்யா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், “கூட்டத்தில் ஒரு பெண்ணின் உடல் பாகங்களைத் தொடும் அளவிற்கு ஒருவருக்கு தைரியம் இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதனால்தான், அவன் ஓடினாலும் என்னால் சும்மா விடமுடியவில்லை. அதனால் நான் மிகுந்த கூச்சலிட்டு அவனை சரமாரியாகத் தாக்கினேன். என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் நிறைய இருப்பினும், இது போன்ற சில மிருகங்களினால் எனக்கு மிகுந்த பயமாக இருக்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தேனியில் மதுபோதையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.