ETV Bharat / entertainment

Vijay:12 மணி நேரத்துக்கும் மேலாக நின்று பரிசளித்த விஜய்... வாரிசு ஸ்டைலில் விடைபெற்றார்!

author img

By

Published : Jun 18, 2023, 7:32 AM IST

Vijay:12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த விழா.. வாரிசு ஸ்டைலில் விடை பெற்ற விஜய்
Vijay:12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த விழா.. வாரிசு ஸ்டைலில் விடை பெற்ற விஜய்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் 12 மணி நேரத்திற்கும் மேலாக விஜய் மாணவர்களுக்கு நின்று சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இது பெரும்பாலும் பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ள நிலையில், நடப்பாண்டு முதல் ஒரு புது முயற்சியை விஜய் மக்கள் இயக்கம் எடுத்து உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று (ஜூன் 17) நடைபெற்றது.

சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினார். இதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்தார்.

அப்போது, அவர் வீட்டில் இருந்து புறப்படும்போதே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், விஜய் வந்த கார் ஊர்ந்தே வந்தது. பின்னர், நிகழ்ச்சி மேடையில் ஏறி அனைவருக்கும் கையசைத்த விஜய், பின்னர் மேடை முன்னால் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் இடையே அமர்ந்தார். அப்போது, அவருக்கு மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் நினைவுப்பரிசினை வழங்கினார்.

இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் சென்று அமர்ந்தார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய விஜய், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக 'அசுரன்' படத்தின் இறுதிக் காட்சியில் இடம் பெற்றிருந்த வசனத்தை கூறினார்.

மேலும் பேசிய அவர், “உங்களின் (மாணவர்கள்) குணம் மற்றும் சிந்திக்கும் திறனே நீங்கள் கற்ற கல்வியை முழுமையாக்கும்” எனத் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கக் கூடாது என கூறுமாறு தெரிவித்தார். இதனையடுத்து, மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வு தொடங்கியது. இந்த நிகழ்வின்போது, பலரும் தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

குறிப்பாக, தங்களது பெற்றோருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என சில மாணவர்கள் கேட்டபோது, அவர்களுக்கும் சால்வை அணிவித்து விஜய் கெளரவப்படுத்தினார். அதிலும் சிலர், விஜய் நடித்த படங்களில் இடம் பெற்ற வசனங்களையும், அவரது உடல் மொழிகளையும் வெளிப்படுத்தி நெகிழ்ச்சி அடைந்தனர்.

அது மட்டுமல்லாமல், 12ஆம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை விஜய் பரிசாக அளித்தார். இதனிடையே, விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், பாதுகாவலர்கள் என அனைவருக்கும் சைவ விருந்து வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்கள் அழைத்து வரப்பட்டதில் இருந்து அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு மற்றும் மீண்டும் திரும்பி ஊருக்குச் செல்வதற்கான அனைத்துச் செலவுகளையும் விஜய் ஏற்றுக் கொண்டார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு கிட்டத்தட்ட ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க இருந்ததால், நிகழ்ச்சி சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இருப்பினும், தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்து மாணவர்களுக்கும் விஜய் சான்றிதழ்களையும், அவர்களது வேண்டுகோள்களையும் நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதனையடுத்து விஜய் புறப்பட்டுச் சென்றார். இறுதியாக, வாரிசு ஸ்டைலில் அனைவருக்கும் முத்தம் வழங்கி விஜய் அங்கு இருந்து விடைபெற்றார்.

இதையும் படிங்க: "ஓட்டுக்கு காசு வேணாம்! அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க" - அரசியல் அட்வைஸ் சொன்ன விஜய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.