ETV Bharat / entertainment

"சென்னை எனக்கு இரண்டாவது வீடு மாதிரி"- செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை கத்ரினா கைஃப்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 6:54 PM IST

சென்னையில் நடைபெற்ற மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் நடைபெற்ற மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு

Merry Christmas Movie: ஸ்ரீராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியிருக்கும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும் ஜன.12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (ஜன.7) சென்னையில் நடைபெற்றது.

சென்னை: ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். இந்தாண்டு தொடக்கத்திலே ஏராளமான படங்களைத் தன்வசப்படுத்தியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, ஜவான் படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் மற்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் இணைந்துள்ளார். இந்தப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜன.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படக்குழு தற்போது இப்படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் இறங்கியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று(ஜன.7) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகை கத்ரீனா கைஃப், "சென்னை எனக்கு இரண்டாவது வீடு மாதிரி. எனது முதல் தமிழ்ப் படம் மெரி கிறிஸ்துமஸ். நான் தெலுங்கு, மலையாள ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப்படம் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படம் எதிர்பாராத விதமாக எனக்கு அமைந்தது. நான் விஜய் சேதுபதியின் 96 உள்ளிட்ட படங்களைப் பார்த்திருக்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "நான் படப்பிடிப்பு முடிந்த பிறகு தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். மிகவும் கஷ்டமாக இருந்தது" என்று தமிழில் பேசினார்.

பின்னர், இயக்குநர் ஸ்ரீ ராம் பேசுகையில், "விஜய் சேதுபதியுடன் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் நன்றாக நடித்துக் கொடுத்தார்.‌ 96 படத்தைப் பார்த்துவிட்டு இவரை நடிக்க வைக்க எனது குழுவிடம் கேட்டேன். அவர்களும் வித்தியாசமான காம்போவாக இருக்கும் என்று இப்படத்திற்கு ஆர்வம் காட்டினர். எங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பிரமாதமாக நடித்துள்ளார்" என்று பேசினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சண்முகராஜன், "முதலில் தியாகராஜா குமாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகராஜா குமார ராஜா தான் என்னை இயக்குநர் ஸ்ரீராமுக்கு அறிமுகப்படுத்தினார். எந்தப் படம் நடித்தாலும் படத்தில் நடிக்கும் கலைஞர்களுடன் ஒரு நட்புறவு கொள்ள வேண்டும் என நினைப்பேன். இந்தப்படத்தில் சிலர் எனக்கு முன்னதாக அறிமுகமாகியிருந்தாலும் சிலர் பழக்கம் இல்லாதவர்களாகவே இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி, ராதிகா சரத்குமார் ஆகியோருடன் எனக்கு முன்னதாகவே கூத்துப்பட்டறையில் வேளைப்பார்த்த அனுபவம் இருந்தது.

நடிகை கத்ரினாவுடன் எப்படிப் பேசுவது என்று தயங்கிய நிலையில், அவருடன் நான் மதுரை என்று சொன்னதுடன் அவர் என் அம்மா மதுரையில் தான் வசித்து வருகிறார் என்று சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற புகைப்படங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது வெளிமாநிலத்தவர் என்ற மனப்பான்மை நீங்கி நம்மூர் போன்ற மனப்பான்மைத் தோன்றியது. இந்தப்படத்தில் பணியாற்றியது, எங்கள் பெரும் அனுபவமாக இருந்தது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினாவின் நடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. படப்பிடிப்பின் போது அனைவரிடத்திலும் அந்த ஸ்னுக்கான ஒப்புதலைப் பெற்றபின் ஒரு புரிதலைக் கொண்டு விஜய் சேதுபதி நடிப்பார். அதேபோன்று கத்ரினா, ஷூட்டிங் ஸ்பாட்டில் கத்ரினா அதிகமாகக் கேள்வி கேட்பார். அது சக நடிகர்களுக்குப் பட ஸீன் குறித்து ஆழ்ந்தப் புரிதலை ஏற்படுத்தியது. தமிழில் முதல் முறையாக என்டிரீ கொடுக்கும் இயக்குநர் ஸ்ரீராமை வரவேற்கிறேன். இந்தப் படம் எனக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது. வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும், படம் ரீதியாக உதவிய அனைவருக்கும் நன்றி" தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, "இந்தப் படத்தை பற்றி பேச வேண்டுமென்றால் நன்றி தான் சொல்ல வேண்டும். மெரி கிறிஸ்துமஸ் என்று தமிழ்ப்படம் இந்தியிலும் வருகிறது என்று இந்தப் படத்தை பற்றி சொன்ன போது, பாடல்கள் வழக்கமான பாடலாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடல்கள் புது அனுபவத்தைக் கொடுத்தது" என்று படத்துடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இதையடுத்துப் பேசிய நடிகை தீபா வெங்கட், "இந்த படத்தில் கத்ரினா கைஃப்க்கு நான் தான் குரல் கொடுத்திருக்கிறேன். கத்ரினாவுக்கு தமிழ் தெரியாது. ஆனால் விஜய் சேதுபதி உடன் படம் முழுக்க கத்ரினா நடிக்கிறார். ஒவ்வொரு டேக்கிற்கு முன்பும் பலமுறை ரிகர்சல் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார். இந்தப்படத்திற்காக கத்ரினா கடுமையாக உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு புது அனுபவத்தைக் கொடுத்தது" என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.