ETV Bharat / entertainment

Ponniyin Selvan 2 : கல்கி சொல்லாததை மணிரத்னம் சொல்வாரா?

author img

By

Published : Apr 26, 2023, 8:36 PM IST

Mani
கல்கி

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலன் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற‌ உண்மையை மணிரத்னம் கூறுவாரா? அல்லது கல்கியைப் போலவே அதை மர்மமாக விட்டுவிடுவாரா? என்பது தொடர்பாக ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவில் வரலாற்றுத் திரைப்படங்களுக்கென்று தனி மவுசு உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பமான கதைக்களங்களில் வரலாற்று கதைக்களமும் ஒன்று. தமிழில் வெளியான அரவான், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலிராமன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட வரலாற்றுத் திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

தமிழில் அவ்வப்போது வரலாற்றுத் திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த சூழலில்தான், கடந்த 2015ஆம் ஆண்டு தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படம் வெளியானது. அதன் பிறகு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வரலாற்றுப் படங்கள் அதிகம் எடுக்கப்பட்டன.

அந்த வகையில் தமிழில் வெளியான மிக முக்கியமான வரலாற்றுத் திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். அமரர் கல்கி எழுதி 1950-களில் தொடராக வெளிவந்தது பொன்னியின் செல்வன் கதை. இந்த கதையை ஒரு புனைவு கதையாக கல்கி எழுதியிருந்தார். 9ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் தொடங்கி 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர்களின் ஆட்சியில் வரலாற்று குறிப்புகளை அடிப்படையாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டு இருந்தது.

இந்த நாவலை எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் திரைப்படமாக எடுக்க‌ முயன்றும் முடியாமல் போனது. ஐந்து பாகங்கள் கொண்ட இந்த புதினத்தை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனை எப்படி திரைப்படமாக எடுக்கப்போகிறார்கள்? என்ற ஆச்சர்யம் ஒரு புறமிருக்க, எந்தெந்த கதாபாத்திரத்தில் யார் எல்லாம் நடிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால், நாவலைப் படித்தவர்களுக்கு ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு வடிவில் மனதில் பதிந்திருக்கும். அதனை திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர் நடிகைகளை மணிரத்னம் தேர்வு செய்திருந்தார். நாவலில் மிக முக்கியமான கதாபாத்திரமாக அறியப்படுவது வந்தியத்தேவன் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். ஆதித்த கரிகாலன் வேடத்தில் விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையா த்ரிஷா, சுந்தர‌சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன் என கச்சிதமான நடிகர்களை தேர்வு செய்திருந்தது படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது.

பொன்னியின் செல்வன் புதினத்தின் ஐந்து பாகத்தில் முதல் இரண்டு பாகங்கள், படத்தின்‌ முதல் பாகத்தில் வருகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது. இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்திருந்தது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டினாலும், நாவல் படித்தவர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. ஏனென்றால், நாவலில் வந்த சில முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. போர்க் காட்சிகளில் கிராஃபிக்ஸ் சற்று பிரச்னையாக இருந்ததாக ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. ஆனாலும், பொன்னியின் செல்வன் முதல் பாகம், சினிமா ரசிகர்களை திருப்தி படுத்தியது என்றே கூறலாம்.

தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழுவினர் ஊர் ஊராக சென்று புரோமோஷன் செய்து வருகின்றனர். ஆனால், படத்துக்கான விளம்பரம் என்பது கடந்த முறையை விட தற்போது குறைந்துவிட்டதாக பேசப்படுகிறது.

முதல் பாகம் வரவேற்பு பெற்றாலும், தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. போர்க் காட்சிகள், மற்ற‌ தேவையற்ற காட்சிகள் என‌ சற்று சோர்வை ஏற்படுத்தியது என்றே கூறலாம். இதே குறைகள் இரண்டாம் பாகத்திலும் நீடித்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்ட வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், கோடை விடுமுறை என்பதால், குடும்ப ரசிகர்கள் அதிகளவு படத்தைப் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற‌ உண்மையை மணிரத்னம் தெளிவாக காண்பிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி இதனைப் பார்வையாளர்கள் பார்வைக்கே விட்டுச்சென்று இருப்பார். ஆதித்த கரிகாலன் கடம்பூர்‌ அரண்மனையில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவார். ஆனால், அவரை கொலை செய்தது யார்? என்று சொல்லப்பட்டிருக்காது. இதனை மணிரத்னம் எவ்வாறு கையாண்டு இருப்பார்? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

கல்கியைப் போல் உண்மையான குற்றவாளியை மக்களே யூகித்து கொள்ளட்டும் என்று மணிரத்னம் விட்டிருப்பாரா? - ஆதித்த கரிகாலனை கொலை செய்தது நந்தினியா, வந்தியத்தேவனா, பாண்டிய‌ நாடு ஆபத்துதவி ரவிதாசனா என ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த இந்த இறுதிப்பகுதியை மணிரத்னம் எவ்வாறு‌ காட்சி படுத்தியிருப்பார்? என்ற ஆவல் எழுந்துள்ளது. வந்தியத்தேவன் மீது குற்றம் சுமத்தப்பட்டாலும், உண்மையில் ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார்? என்பதை கல்கி சொல்லவேயில்லை. இதனை மணிரத்னம் சொல்வாரா? என்று பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2

இதையும் படிங்க: ராமின் "ஏழு கடல் ஏழு மலை": புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.