ETV Bharat / entertainment

"கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதில்லை" - டிரெண்டாகும் செல்வராகவன் தத்துவம்!

author img

By

Published : Apr 8, 2023, 5:18 PM IST

Etv Bharat
Etv Bharat

இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து கடவுள், நட்பு, வெறுப்பு குறித்து தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடவும் யாரையும் கரை சேர்க்க தவறியதில்லை என்ற தத்துவம் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் ஜீனியஸ் இயக்குநர் என்று பெயர் பெற்றவர். இவரது படைப்புகள் அனைத்தும் அற்புதமான ஒரு வாழ்வியல் அனுபவமாக படம் பார்க்கின்ற ரசிகர்களுக்கு இருக்கும். இதுவே இவரது படங்களின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. காதல் கொண்டேன் தொடங்கி 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் எதாவது புதுமையை செய்து வருபவர். இவர் கடைசியாகத் தனது தம்பி தனுஷை கதாநாயகனாக வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

ஆனால் நானே வருவேன் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆன பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. அதற்கு இடையில் திடீரென நடிகராக அவதாரம் எடுத்துவிட்டார் செல்வராகவன்.

விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சாணிக் காகிதம் படத்தில் நடித்த அவர் மோகன் ஜி இயக்கிய பகாசூரன் படத்தில் கதை நாயகனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். இப்படி இயக்கம் தாண்டி நடிகராகவும் தனது திறமையை நிரூபித்து வரும் செல்வராகவனை இயக்குநராக பார்க்கவே ரசிகர்கள் விருப்புகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பல தத்துவங்களைப் பதிவிட்டு வருகிறார் செல்வராகவன். இதற்கும் தனியாக ரசிகர் பட்டாளம் இருப்பது தனிக்கதை.

"கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதில்லை"

தற்போது தத்துவம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது ’உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்?’ என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பாக ’என் அனுபவத்தில் சொல்கிறேன் நல்ல நண்பர்களை இழந்துவிடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாக வேறு எதையும் யோசித்ததில்லை இப்போது எங்கு போய் நட்பை தேடுவேன்’ என நட்பு குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க தத்துவம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது முதலில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுத்து வெளியிடுங்கள் என்று மற்றொரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

இதையும் படிங்க: "விடுதலை படம் தமிழ் சினிமா பார்க்காத கதைக்களம்" - படக்குழுவை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.