ETV Bharat / crime

சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் இரு தொழிலதிபர்கள் புகார்!

author img

By

Published : Jun 15, 2021, 9:33 PM IST

ஹரி நாடார்
harinadar

மோசடி புகாரில் ஏற்கனவே கர்நாடக சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது, மேலும் இரண்டு தொழிலதிபர்கள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை: சிறையில் இருக்கும் ஹரி நாடார், வங்கிக் கடன் பெற்று தருவதாகக் கூறி தங்களிடம் இருந்து ரூ.1.5 கோடி பணத்தை பெற்று ஏமாற்றியதாக, இரண்டு தொழிலதிபர்கள் மேலும் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டவர் ஹரி நாடார். இவர் மீது, கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த மோசடி புகாரின்பேரில், திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த ஹரி நாடாரை பெங்களூரு காவல்துறையினர், அண்மையில் கைது செய்து கர்நாடக சிறையில் அடைத்தனர்.

ரூ.100 கோடி வங்கிக் கடன்

இந்த நிலையில், ஹரிநாடார் மீது குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் ரூ.100 கோடி வங்கிக்கடன் குறைந்த வட்டிக்கு வாங்கித் தருவதாகக்கூறி, ரூ.1.5 கோடி பணம் பெற்று தங்களை ஏமாற்றியதாகச் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த இஸ்மாயில் சக்ராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் பஷீர் ஆகிய இருவரும் இணைந்து, குஜராத்தில் பலசரக்கு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அங்கிருந்து அவர்கள் அரபு நாடுகளுக்கு பலசரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

கடந்தாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக, இவர்களது தொழில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளது. அதனை சரி செய்வதற்காக, வங்கியில் ரூ.100 கோடி கடனாகப் பெற முயற்சித்து வந்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அலி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகியோரின் மூலம் தொழிலதிபர்களின் விவரங்களை அறிந்த ஹரி நாடார், இரண்டு தொழிலதிபர்களையும் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது தான் 'கேப்பிட்டல் யூபி இன்வெஸ்ட்மென்ட்' (CAPITAL UP Investments) என்ற கம்பெனியின் ஆசிய நாடுகளுக்கான நிர்வாகி எனவும், இதன் மூலம் இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு ஆறு சதவீத வட்டியில் அதிகளவில் கடன் பெற்று கொடுத்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்துள்ளார்.

இரு தொழிலதிபர்கள் புகார்

இதை நம்பிய தொழிலதிபர்கள் இருவரையும் ஹரி நாடார், சென்னை தியாகராயநகர் வரவழைத்து, அவரின் அலுவலகத்தில் வைத்து ரூ.100 கோடி பணத்தை 6 சதவீத வட்டியில் தான் பெற்றுத் தருவதாகவும், இதற்கு இரண்டு சதவீத கமிஷன் தனக்கு தர வேண்டுமெனவும் ஹரி நாடார் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மூன்று தவணைகளாக ரூ.1.5 கோடி பணத்தை ஹரி நாடாருக்கு தொழிலதிபர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வங்கி கடன் குறித்து கேட்டபோது எல்லாம், தற்போது தான் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும், தேர்தல் முடிந்த உடன் வங்கி கடனை உடனடியாக பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வங்கி கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது, ஹரிநாடார் கொண்டு வந்த பத்திரங்கள் அனைத்தும் போலியானது என தொழிலதிபர்களுக்குத் தெரியவந்துள்ளது.

ஹரி நாடார் மீது புகார்

இதனையடுத்து அங்கு ஏதோ காரணம் சொல்லி ஹரி நாடார் சமாளித்ததாகவும், திருநெல்வேலி வருமாறு இரண்டு தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சொந்த ஊர் திரும்பிய தொழிலதிபர்கள் தங்களுக்கு வங்கிக் கடன் வேண்டாம் எனவும், தாங்கள் செலுத்திய ரூபாய் ஒன்றரை கோடி பணத்தைத் திரும்ப தருமாறு கேட்டுள்ளனர்.

ரூ.1.5 கோடி பெற்று அலைக்கழிப்பு

அதற்கு ஹரி நாடார் தான் விரைவிலேயே அந்த பணத்தை தருவதாகக் கூறி, அதன் பின் அவர்களின் மொபைல் போனை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் தொழிலதிபர்கள் இருவரும், தாங்கள் ஹரி நாடாரால் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் தியாகராயநகர் காவல் நிலையத்தில், இச்சம்பவம் குறித்து ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் விசாரணை செய்த காவல்துறை உயர் அலுவலர்கள், மோசடி செய்யப்பட்ட பணம் ஒரு கோடிக்கும் அதிகம் என்பதால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தொழிலதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவில் புகார்

அதன்பேரில் தொழில் அதிபர்கள் அப்துல் பஷீர், இஸ்மாயில் சக்ராத், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்களிடமிருந்து ஹரி நாடார் ஏமாற்றிய ரூ. 1.5 கோடி பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்தனர்.

ஏற்கனவே வங்கி கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு, தற்போது கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடார் மீது மேலும் தொழிலதிபர்கள் இருவர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.