சுற்றிப்பார்க்க அழைத்துச் சென்றபோது துயரம்: இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

author img

By

Published : Sep 11, 2021, 6:26 AM IST

two children drowned in temple pond

ஆம்பூர் அருகே விடுமுறையில் மலைப்பகுதியைச் சுற்றிக் காண்பிக்க தனது இரு குழந்தைகளை அழைத்துச் சென்ற தந்தையின் கண்முன்னே, அக்குழந்தைகள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருப்பத்தூர்: ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த தம்பதி லோகேஸ்வரன் - மீனாட்சி. இவர்களுக்கு 8 வயதில் ஹரிப்பிரியா என்ற மகளும், 6 வயதில் யஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கைலாசகிரி மலைப்பகுதியில் உள்ள முருகன் கோயிலில் உள்ள குளத்தில், தனது இரு பிள்ளைகளுடன் லோகேஸ்வரன் மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

லோகேஸ்வரன் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஹரிப்பிரியா குளத்தில் தவறிவிழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட யஸ்வந்தும் நீரில் குதித்துள்ளார்.

நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த குழந்தைகளை மீட்க லோகேஸ்வரன் நீண்ட நேரம் போராடியும், காப்பற்ற முடியாமல் அவரது கண்முன்னே நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.

இதனையறிந்த உமராபாத் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இரு குழந்தைகளின் உடல்களை மீட்டு, சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு உடல்களை டோலி கட்டி சுமந்துசென்று உடற்கூராய்விற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.