குழந்தையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் சிக்கினர்!

author img

By

Published : Feb 6, 2021, 10:55 PM IST

Sexual abuse case in chennai

13 வயது குழந்தையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 22 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைக்கு முதற்கட்ட இழப்பீடாக 1.5 லட்ச ரூபாயை வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 13 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 22 பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, சபீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் 13 வயதான தனது மகளை கட்டயாப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு விசாரணையில், மேலும் சில நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்ததுள்ளது. அதில், இராசேந்திரன் (44) காமேஸ்வ ரராவ்(33), புகழேந்தி (45), முகமது அசாருதின் (35), பசுலுதின் (32), வினோபாஜி (39), கிரிதரன் (36), அனிதா (எ) கஸ்தூரி (36), இராஜசுந்தரம் (62), மாரீஸ்வரன் (46), நாகராஜ் (30), பொன்ராஜ் (33), வெங்கட்ராமன் (எ) அஜய் (25), கண்ணன் (53) ஆகியோர் குற்றச்செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி, ஆலோசனை, பிற சட்ட உதவி, கொடூரமான குற்றங்களால் ஏற்படும் அதிர்ச்சி , களங்கத்திலிருந்து விடுபடுவதற்காக உதவிகள் வழங்கப்பட்டது. மேற்கண்ட பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு அந்த குற்றம் தொடர்பான அறிவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதோடு சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பாக , பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சீர்திருத்த மற்றும் மறுவாழ்விற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சென்னை பெருநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. குழந்தைக்கு ஆதரவாக ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு நீதிமன்றம் இடைக்கால இழப்பீட்டு உதவித்தொகையான ரூ.1.5 லட்சத்தை பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.