கோடநாடு வழக்கு எழுப்பும் கேள்விகள்?

author img

By

Published : Aug 28, 2021, 12:38 PM IST

கோடநாடு கொலை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விசாரணை அலுவலரின் வாக்குமூலமும், அதில் எழுந்துள்ள பல கேள்விகள் குறித்து காணலாம்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், 2017ஆம் ஆண்டு புகுந்த ஒரு கும்பல் காவலாளியான ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இது தொடர்பாக கோத்தகிரி காவல் துறையினர் சயான், மனோஜ், மனோஜ் சாமி உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் தேடப்பட்டுவந்த நிலையில், சாலை விபத்தில் மரணமடைந்தார். இதேபோல் எஸ்டேட்டின் சிசிடிவி ஆபரேட்டரான தினேஷ் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து சயானின் குடும்பத்தினர் சென்ற கார் விபத்தில் சிக்கி, அவரது மனைவி, குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து வழக்கில் தொடர்புடைய நபர்கள் இறந்ததால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சர்ச்சையாகி பேசுபொருளாக மாறியது.

விசாரணை

ஆனால் கோத்தகிரி காவல் துறையினர் சாதாரண கொலை, கொள்ளை வழக்கு போல் விசாரித்து கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு முறையாக விசாரிக்கபடவில்லை எனவும், பல அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக சர்ச்சை கிளம்பியதால் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என திமுக அறிவித்தது. திமுக ஆட்சி அமைத்தவுடன் மீண்டும் கோடநாடு வழக்கு தூசி தட்டப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் கோடநாடு வழக்கில் சசிகலா, இளவரசி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் உள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என விசாரணை அலுவலரான, கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் மீது குற்றம்சாட்டி வந்த நிலையில், பாலசுந்தரம் நீலகிரி நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

எழுப்பப்படும் கேள்விகள்

குறிப்பாக முக்கிய வழக்காக பார்க்கக்கூடிய இந்த கொள்ளை குறித்து, காவல் ஆய்வாளர் பால சுந்தரத்திற்கு தகவல் வருவதற்குள் காலை 7.15 மணிக்கு தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கொள்ளை நடந்த இடத்திற்கு அவர்கள் விரைந்தது எப்படி? காவல் ஆய்வாளருக்கு தாமதமாக தகவல் அளிக்கபட்டதற்கான காரணம் என்ன?

கேட் மற்றும் வாகனங்களை புகைப்படம் எடுத்ததாக கூறிய காவல் ஆய்வாளர் கொள்ளை நடந்த பகுதியில் ஏன் புகைப்படம் எடுக்கவில்லை? சம்பவம் நடந்த போது சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை எனவும், மின்தடை ஏற்பட்டது குறித்து காவல்துறை ஏன் முழுமையான விசாரணை நடத்தவில்லை.

சிசிடிவி ஆப்ரேட்டரான தினேஷிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் உள்ளது எனவும், காணாமல் போனவை குறித்து சசிகலா மற்றும் இளவரசிக்கு மட்டுமே தெரியும். அவர்களிடம் விசாரணை நடத்தாதற்கான காரணம் என்ன?

கோடநாடு பங்களாவில் 14 கேட் உள்ள நிலையில், கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட 3 கேட் மட்டும் ஆய்வு செய்து விசாரணை நடத்தியது ஏன்? சம்பவம் நடந்தபோது குறைந்த அளவிலான காவலாளிகள் மட்டுமே பணியில் இருந்தது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை?

பங்களாவில் வருகை பதிவேடு இருந்ததா. அதை ஏன் காவல்துறை கைப்பற்றி விசாரிக்கவில்லை? வழக்கை அரசியல் கண்ணோட்டமாக மட்டுமே காவல் ஆய்வாளர் விசாரித்ததாக தெரிவித்துள்ளார். முக்கிய வழக்கை இவ்வளவு அலட்சியமாக விசாரித்தது ஏன்? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

முன்னாள் முதலமைச்சருக்கு தொடர்பா?

குறிப்பாக இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சில அதிமுக அமைச்சர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த வழக்கின் மறுவிசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறை கூடுதல் விசாரணை மேற்கெள்ளலாம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.