ETV Bharat / crime

அமைச்சர் மருமகன் எனக்கூறி மோசடி - போலீஸ் தீவிர விசாரணை

author img

By

Published : Sep 17, 2021, 7:03 AM IST

அசாம் மாநில அமைச்சரின் மருமகன் எனக்கூறி 1.25 கோடி மோசடி செய்துவிட்டு, தன்னை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ரவுடி, காவலர் உட்பட 3 நபர்கள் மீது பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குற்றவாளி கார்த்திக் பிரசன்னா
குற்றவாளி கார்த்திக் பிரசன்னா

சென்னை: விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் சைதாப்பேட்டையில் தொலைதூர கல்வி நிலையத்தை வைத்து நடத்திவருகிறார்.

இவருக்கு அறிமுகமான கார்த்திக் பிரசன்னா என்பவர், தான் அசாம் மாநில அமைச்சரான ராஜன் கொஹைனின் மருமகன் என தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்திய விமான படையில் பைலட் எஸ்கார்ட் ஆபிசராக இருப்பதாக அடையாள அட்டை காண்பித்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக மோசடி

தொடர்ந்து, ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தலா ஒருவருக்கு 3.5 லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும், தனக்கு தரகுத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், ஏஜெண்டாக வேலை பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்களிடம் பெற்ற 1.25 கோடி ரூபாய் பணத்தை கார்த்திக் பிரசன்னாவின் மனைவியான ஜூரி ராணி தேவியின் வங்கி கணக்கிற்கு முத்துக்குமரன் அனுப்பியுள்ளார்.

Also read: ஏமன் பயணிக்கவிருந்த வேலூர் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது!

ஆனால் நீண்ட மாதமாக பணி வாங்கி தராததால், சந்தேகமடைந்த முத்துக்குமரன் ரயில்வேயில் சென்று விசாரித்த போது, கார்த்திக் பிரசன்னா அசாம் அமைச்சரின் மருமகன் எனக்கூறியது பொய் என்றும், இதேபோல் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

கடத்தல்

இதனால் கார்த்திக் பிரசன்னாவிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு, எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகே வரக்கூறியதாகவும், அப்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் காவல் துறையினர் எனக்கூறி காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று விடுதியில் அடைத்துவைத்து, நிர்வாணமாக்கியுள்ளனர். மேலும், வேலை வாங்கி தருவதாக பொதுமக்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியது முத்துக்குமரன்தான் என செல்போனில் மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். அதுமட்டுமில்லமால், அவர் வைத்திருந்த 80 ஆயிரம் பணத்தையும் பறித்து தப்பி சென்றனர்.

Also read: இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - நைஜீரியர்கள் கைது

பின்னர் மதுரை ரவுடி கணபதி, கார்த்திக் பிரசன்னா, ஐ.பி.எஸ் அலுவலர் ஒருவருக்கு பாதுகாப்பு காவலராக இருக்கக்கூடிய அருண் ஆகியோர் இணைந்து மீண்டும் முத்துக்குமரனிடம் 15 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், உடனடியாக 1.25 கோடி பணத்தை பறித்துவிட்டு மிரட்டிய கார்த்திக் பிரசன்னா, காவலர் அருண், ரவுடி கணபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

புகாரின் மீது உண்மை தன்மை உள்ளதா என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முத்துகுமரனை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.