வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 20ஆம் தேதியன்று உடல் முழுவதும் காயங்களுடன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் அவர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது ஏழுமலை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் கூறுகையில், "இறந்த பெண் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவரத்தினம். அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு எட்டு வயதில் அரவிந்த் என்ற மகன் உள்ளான். அவர்கள் குடும்பத்தோடு புதுக்கோட்டையில் வசித்துவந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த தம்பதியினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்தாண்டுகளாக இருவரும் பிரிந்து, சிவரத்தினம் தன் மகனோடு தஞ்சையில் உள்ள அவர் தாயார் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சிவரத்தினம் குடும்பச் சூழ்நிலை காரணமாக, திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பின் ஏழுமலைக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன் வாங்கிக்கொடுத்து ரொக்கமாக பணத்தையும் சிவரத்தினம் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அதைத் திருப்பி கேட்ட சிவரத்தினத்தை, ஏழுமலை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.