வேலூர்: தமிழ்நாட்டில் இருந்து காட்பாடி வழியாக கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆகஸ்ட் 1ஆம் தேதி வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
31 டன் ரேஷன் அரிசி கடத்தல்
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டைக்கு 621 முட்டைகளில் 31 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைச் சேர்ந்த பாலு, கோபி, சென்னையைச் சேர்ந்த பிரபு ஆகிய மூவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ரேஷன் அரிசி ஒப்படைப்பு
மேலும், ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வேலூர் அடுத்த தொரப்பாடியிலுள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்ட சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த பிரபு (37) என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவர் தொடர் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இதனால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு உணவு பாதுகாப்பு துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
இதனையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதற்கான நகல் மத்திய சிறையிலுள்ள பிரபுவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு.. மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை?